சனி, 21 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: சனி, 21 செப்டம்பர் 2024 (10:36 IST)

நடிகை பார்வதி, அயலான் தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு: என்ன காரணம்?

நடிகை பார்வதி நாயர், அயலான் தயாரிப்பாளர் உள்பட 7 பேர் மீது சென்னை தேனாம்பேட்டை காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

நடிகை பார்வதி நாயர் வீட்டில் பணிபுரிந்த ஊழியர் சுபாஷ் சந்திரபோஸ் தாக்கப்பட்டதாக வந்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அயலான் படத்தின் தயாரிப்பாளர் கொடப்பாடி ராஜேஷ் உள்ளிட்ட சிலர் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

 "என்னை அறிந்தால்," "கோடிட்ட இடங்களை நிரப்புக," "உத்தம வில்லன்," மற்றும் "நிமிர்" போன்ற படங்களில் பார்வதி நாயர் நடித்துள்ளார். சமீபத்தில், விஜய்யின் "கோட்" படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். இவர், சென்னை நுங்கம்பாக்கத்தில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 2022-ஆம் ஆண்டில், பார்வதி நாயர் வீட்டில் இருந்து ரூ. 10 லட்சம் மதிப்பிலான கைக்கடிகாரம், ஐபோன், மடிக்கணினி போன்றவை காணாமல் போனதாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதற்காக தனது வீட்டில் பணிபுரிந்த சுபாஷ் சந்திரபோஸை சந்தேகித்தார்.

சுபாஷ் சந்திரபோஸ், இதற்குப் பதிலாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பார்வதி நாயர் உள்பட ஏழு பேர் மீது புகார் அளித்தார். அதில், தன்னை அடைத்து வைத்து தாக்கியதாக குற்றம் சாட்டினார். இந்த புகாரில் நடவடிக்கை எடுக்கப்படாததால், அவர் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

நீதிபதி ஜெயச்சந்திரன், சுபாஷ் அளித்த புகாரின் அடிப்படையில், உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். ஆகஸ்ட் 29ஆம் தேதி இந்த உத்தரவு வழங்கப்பட்டதுடன், சுபாஷ் தரப்பில் மீண்டும் காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதனால், தேனாம்பேட்டை காவல்துறை, பார்வதி நாயர், கொடப்பாடி ராஜேஷ் மற்றும் மற்ற 6 பேர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

Edited by Mahendran