தேவையான பொருட்கள்: மைதா - அரைக் கிலோ உருக்கின டால்டா - 200 கிராம் தண்ணீர் - 300 மில்லி லெமன் சால்ட் - கால் தேக்கரண்டி சோடா உப்பு - ஒரு சிட்டிகை பாகு செய்ய: சர்க்கரை - அரைக்கிலோ தண்ணீர் - கால் லிட்டர் செய்முறை: மைதா மாவுடன் சோடா உப்பு, லெமன் சால்ட், தண்ணீர், டால்டா ஊற்றி மாவினை ஒன்று சேர இரண்டு கைகளாலும் நன்கு பிசையவும். மாவை நன்கு பிசைந்து கெட்டியாக புரோட்டா மாவு பதத்திற்கு கொண்டு வரவும். பிசைந்த மாவினை அரை மணி நேரம் ஊற விடவேண்டும். பின்னர் அந்த மாவினை உருளையாக உருட்டி, பிறகு தட்டிய மாவினை விரல்களில் எடுத்து, ஒரு கையின் கட்டை விரலினால் சற்று குழிவாக கிண்ணம் போல் வருமாறு அழுத்தி விடவும். அடுத்து ஜீரா காய்ச்ச வேண்டும். அரைக்கிலோ சர்க்கரைக்கு கால் லிட்டர் தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சவும். சுமார் 10 நிமிடங்கள் பாகு கொதிக்கவிட்டு, கையில் ஒட்டும் பதம் வந்தவுடன் இறக்கி, ஆறவிடவும். பின்னர் இறுகி விடாமல் இருக்க எலுமிச்சை சாறு சிறிதலவு சேர்க்கவும். பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். எண்ணெய் காய்ந்ததும் தயார் செய்து வைத்துள்ள பாதுஷாக்களை எண்ணெய் போட்டு பொரிந்து, வெண்ணிறமாகி மேல் நோக்கி வந்து மிதக்கும். பிறகு, தீயை குறைத்து மிதமான சூட்டில் வேகவிடவும். பொன்னிறமாக மாறியதும், எடுத்து, எண்ணெய் வடிகட்டியில் போட்டு எண்ணெய் வடிய விடவும். எண்ணெய் முழுவதும் வடிந்தவுடன், சர்க்கரை பாகு சற்று மிதமான சூட்டில் உள்ளபோதே, பாதுஷாக்கள் அனைத்தையும் சர்க்கரைப் பாகில் போட்டு 5 நிமிடங்கள் ஊறவிடவும். சுவையான பாதுஷாக்கள் தயார்.