நவராத்திரி என்பது விரமிருந்து கொண்டாடப்பட வேண்டியது என்றாலும் விரதம் மேற்கொள்வது அவரவர் விருப்பம். ஈசனை வழிபடுவதற்கு ஒரு ராத்திரி எனில் ஈஸ்வரியை வழிபட நவராத்திரி.
நவம் - என்ற சொல்லுக்கு ஒன்பது என்றும் புதியது என்றும் பொருள். ஒன்பது இரவுகள் கொண்டாடப்படும் விழாவிற்குப்பின் பத்தாம் நாள் விஜய தசமி. ஸ்ரீராமபிரான் ஸ்ரீதுர்கா பூஜை செய்த பின்னரே, இராவணனுடன் போர் புரிந்தார் என்றும் கூறுவர்.
மகாபாரதத்தில் பாண்டவர்கள் அஞ்ஞாத வாசம் முடிந்ததும் வன்னி மரத்தின் உள்ளிருந்து ஆயுதங்களைத் திரும்பவும் எடுத்த நாள் விஜய தசமி. புரட்டாசிக்குப் பின் குளிரும் பங்குனிக்குப் பின் கோடையும் ஆரம்பிக்கின்றன.
மக்களை பலவித பிணிகள் துன்புறுத்தி நலியச்செய்யும் காலம். இவ்வேளையில், பிணிகளின் தாக்குதலில் இருந்து தம்மைக் காத்துக் கொள்ள இறையருளை நாடுவது நவராத்திரியின் நோக்கம் என்பர். தனிச் சிறப்புடைய நவராத்திரி வழிபாடு பெண்களுக்கே உரியது. எனினும் அனைவரும் நவராத்திரி வழிபாட்டில் ஈடுபடலாம்.