திங்கள், 21 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 21 அக்டோபர் 2024 (07:49 IST)

அழைப்பு விடுக்காவிட்டாலும் விஜய்யின் தவெக மாநாட்டிற்கு செல்வேன்: நடிகர் விஷால்

விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்காமல் இருந்தாலும் செல்வேன் என்று நடிகர் விஷால் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டி பகுதியில் நடைபெற இருக்கும் நிலையில், இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில், ஆசிட் தாக்குதலுக்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியில் நடிகர் விஷால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியபோது, "கோவிலுக்கு சென்று சாமி கும்பிடுவதற்குப் பதிலாக, ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மறுவாழ்வு அடைந்தவர்களுக்கு விருது கொடுப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது," என்று தெரிவித்தார்.

"ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்கள் கண்ணாடி கூட பார்க்க முடியாமல் இருக்கிறார்கள். அவர்கள் வெளியே வர வேண்டும், மனதில் இருந்து ஒருவருக்கு நல்லது நினைப்பதுதான் அழகு. இது போன்ற அழகானவர்களுக்கு விருது கொடுப்பதை பெருமைப்படுகிறேன்," என்றும் கூறினார்.

தமிழக வெற்றி கழக மாநாடு குறித்த கேள்விக்கு பதில் அளித்தபோது, "இதுவரை மாநாட்டிற்கு வர எனக்கு அழைப்பு விடுக்கவில்லை. ஆனால், அழைப்பு விடுக்காமல் இருந்தாலும், மாநாட்டில் எங்கேயாவது ஒரு ஓரத்தில் நின்று விஜய் என்ன பேச போகிறார் என்பதை கேட்பேன். விஜய் முதல் முறையாக அரசியல் பேச இருப்பதால், அதை நேரடியாக பார்க்க மாநாட்டிற்கு செல்வேன்," என்று கூறினார்.

"தமிழக வெற்றி கழகத்தில் இணைவது குறித்து இன்னும் யோசிக்கவில்லை. விஜய் மாநாடு நடத்தி முதல் அடி வைத்தால், அவர் என்ன செய்யப் போகிறார், அவருடைய செயல்பாடுகள் என்ன என்பதை பொறுத்து தான் கட்சியில் இணைவது குறித்து முடிவு எடுக்க முடியும்," என்றும் தெரிவித்தார்.


Edited by Siva