தூக்க மாத்திரைகளை போதை மாத்திரைகளாக விற்பனை.. சென்னையில் 2 பேர் கைது..!
தூக்க மாத்திரைகள் மற்றும் உடல் வலி நிவாரண மாத்திரைகளை, போதை மாத்திரைகள் என கூறி விற்பனை செய்த இரண்டு பேர் சென்னையில் உள்ள லாட்ஜில் வைத்து போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களாக, தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டம் அதிகமாக இருப்பதை அடுத்து, போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை பூக்கடை பகுதியில் உள்ள தனியார் லாட்ஜில், இரண்டு பேர் சட்டவிரோதமாக போதைப்பொருள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த லாட்ஜில் சோதனை மேற்கொண்டபோது, மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு பேர், உடல் வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் தூக்க மாத்திரைகளை போதை மாத்திரைகள் என கூறி விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்களிடமிருந்து நான்கு செல்போன்கள் மற்றும் சுமார் 4 லட்சம் ரூபாய் ரொக்க பணம் கைப்பற்றப்பட்டது. மேலும், விசாரணையின் போது, அவர்கள் மும்பையில் இருந்து இந்த மாத்திரைகளை கடத்தி வந்து, சென்னையில் லாட்ஜில் தங்கி வைத்து, போதை மாத்திரைகள் என விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இந்த சம்பவத்தை அடுத்து, இருவரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
Edited by Siva