வியாழன், 17 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: வியாழன், 17 அக்டோபர் 2024 (08:17 IST)

வீட்டிற்குள் புகுந்து அச்சுறுத்திய 5 அடி நீளமுள்ள உடும்பு-வை தீயணைப்புத்துறையினர் மீட்டு வனப்பகுதியில் விடுவித்தனர்!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தும்மக்குண்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ரஜினி, இவரது வீட்டிற்குள் சுமார் 5 அடிக்கு மேல் நீளமுள்ள உடும்பு புகுந்து வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டில் உள்ள பொருட்களை கீழே தள்ளிக் கொண்டிருந்தாக கூறப்படுகிறது.
 
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ரஜினி, உசிலம்பட்டி தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார், இந்த தகவலின் பேரில் விரைந்து வந்த உசிலம்பட்டி தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் ஜெயராமன் தலைமையிலான தீயணைப்புத்துறை வீரர்கள் போராடி வீட்டிற்குள் புகுந்த உடும்பை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
 
சுமார் 3 வயது மதிக்கத்தக்க ஆண் உடும்பு எனவும், 5 கிலோ எடையுடன், 5 அடிக்கு மேல் உள்ள இந்த உடும்பு அறியவகையானது என்றும், தும்மக்குண்டு கிராமத்தின் அருகே உள்ள கண்மாய் பகுதியிலிருந்து உணவு தேடி ஊருக்குள் வந்திருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்ததோடு வனப்பகுதியில் விடுவித்தனர்.
 
5 அடிக்கு மேல் நீளமுள்ள மிக பெரிய அளவிலான உடும்பு வீட்டிற்குள் புகுந்து மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.