ஆதி திராவிடர், பழங்குடியினர் மாணவர்களின் கல்விக்கடன்கள் ரத்து..! தமிழக அரசு அறிவிப்பு..!
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களின் கல்விக்கடன்கள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு 1972-1973 ஆண்டு முதல் 2002-2003-ம் ஆண்டு வரையிலான காலங்களில், மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகள் உள்பட அனைத்து படிப்புகளுக்கும் ; 2003-2004-ம் ஆண்டு முதல் 2009-2010-ம் ஆண்டு வரையிலான காலங்களில், மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கும் வழங்கப்பட்ட கல்விக் கடன்களில் ரூ.48.95 கோடி நிலுவைத் தொகை உள்ளது.
அதை மாணவர்களிடம் இருந்து வசூலிக்க இயலவில்லை. நிலுவைத் தொகையை வசூலிக்க சரியான பதிவேடுகள் மற்றும் விவரங்கள் எதுவும் அலுவலக ஆவணங்களில் இல்லை. மேலும், வசூலிக்கப்பட வேண்டியவர்களை அடையாளம் காணவும் முடியவில்லை. எனவே அந்த ரூ.48.95 கோடி தொகையை சிறப்பினமாக கருதி அதை முழுவதும் தள்ளுபடி செய்து அரசு ஆணையிடுகிறது'
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Edited by Siva