வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 20 பிப்ரவரி 2020 (10:42 IST)

நீங்க போட்ட பிச்சையா...? திமுக மீது பாய்ந்த பா.ரஞ்சித்!!

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் பேச்சுக்கு கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார் இயக்குனர் பா.ரஞ்சித்.
 
சமீபத்தில், திமுக அமைப்பு செயலாளரும் ராஜ்யசபா உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி ஊடங்கள் குறித்தும், பிராமணர்கள் குறித்தும் அநாகரிமாக விமர்சித்தார். இதனால் இவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. இதனைத்தொடர்ந்து இதற்கு வருத்தம் தெரிவித்தார். 
 
இவர் வருத்தம் தெரிவித்த போதும் இதனை ஏற்றுக்கொள்ள முடியாமல் அரசியல் தலைவர்கள் இவரை விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது இயக்குனர் பா.ரஞ்சித் இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 
 
அவர் பதிவிட்டுள்ளதாவது, பார்ப்பனிய வர்ண அடுக்குகளுக்கு எதிராக அயோத்திதாசர் தொடங்கிய திராவிட, தமிழ் உணர்வின் தொடர்ச்சியில் பெரியாரும் முன்னெடுத்த சாதி எதிர்ப்பு திராவிட கொள்கைகளால் ஆட்சிக்கு வந்த பலர் இன்று பெரியாரையும் மறந்து (மறுத்து) விட்டார்கள் என்பதையே சமீபத்திய நிகழ்வுகள் நமக்கு உணர்ந்துகின்றன.
 
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சொன்ன வள்ளுவன் தொடங்கி அயோத்தி தாசர், ரெட்டைமலை சீனிவாசன், எல்.சி குருசாமி, எம்.சி ராஜா, புரட்சியாளர் அம்பேத்கர்,  சிவராஜ், மீனாம்பாள், சத்தியவாணிமுத்து இன்னும் எத்தனை எத்தனையோ பெயர் தெரியாத போராளிகளின் உழைப்பின் பயனாக பெற்ற உரிமையை அவர்களின் போராட்ட வரலாற்றை மறுத்து பிச்சை என்று சொல்லும் சிந்தனையிலிருந்து வெளியே வாருங்கள்.
  
பெரியார் பார்வையை மறந்து விட்ட உங்களுக்கு அவரிடமிருந்து கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது. முன்னோடிகளை படமாக ஆக்கி அஞ்சலி செலுத்துவதை விட, முதலில் அவர்களை கருத்தில் இருத்த பழகுங்கள் என பதிவிட்டுள்ளார்.