வெள்ளி, 14 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 24 செப்டம்பர் 2016 (12:20 IST)

மவுலிவாக்கம் 11 மாடி கட்டிடம் நாளை இடிக்கப்படுகிறது: மக்கள் வெளியேர உத்தரவு

சென்னை போரூரை அடுத்த மவுலிவாக்கத்தில் புதிதாக 11 அடுக்குமாடிகள் கொண்ட 2 கட்டிடங்கள் கட்டப்பட்டு வந்தது. கடந்த 2014–ம் ஆண்டு ஜூன் 28–ந் தேதி ஒரு அடுக்குமாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் 61 பேர் பரிதாபமாக இறந்தனர்.

 
இதையடுத்து அருகில் உள்ள மற்றொரு 11 மாடி கட்டிடத்தை இடிக்க காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். இதுதொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டும் கட்டிடத்தை இடிக்க உத்தரவிட்டது.
 
இதையடுத்து, மவுலிவாக்கம் 11 மாடி கட்டிடம் நாளை இடிக்கப்படுகிறது. இதையொட்டி கட்டிடத்தை சுற்றி 100 மீட்டர் சுற்றளவில் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் வெளியேற உத்தரவிடப்பட்டு உள்ளது.
 
தமிழக அரசு மற்றும் சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் இந்த கட்டிடத்தை இடித்து தகர்க்கும் பணியை ஒரு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்து இருந்தனர். அவர்கள் கட்டிடத்தில் உள்ள தேவையற்ற பொருட்களை அகற்றி வந்தனர்.
 
இந்த நிலையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) இந்த 11 மாடி கட்டிடத்தை வெடிவைத்து தகர்க்க முடிவு செய்து இருப்பதாக சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் மற்றும் போலீசார் தெரிவித்தனர்.
 
வீட்டை விட்டு வெளியேறுபவர்கள் மவுலிவாக்கம் ஊராட்சி அலுவலகத்தில் தங்கி கொள்ளவும், அதன் வளாகத்தில் உள்ள காலி இடத்தில் வாகனங்களை நிறுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
 
கட்டிடம் இடிக்கப்படும் போது அதனை படம்பிடிக்கவும், செய்தி சேகரிக்கவும் வரும் பத்திரிகையாளர்களுக்காக ராஜராஜேஸ்வரி நகர் பின் பகுதியில் உள்ள ஒரு வீட்டு மாடி ஒதுக்கப்பட்டு உள்ளது. 
 
கட்டிடம் இடிக்கும் போது சாலையில் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். எனவே போரூரில் இருந்து குன்றத்தூர் நோக்கி செல்லும் வாகனங்கள் மதனந்தபுரம் வழியாகவும், குன்றத்தூரில் இருந்து போரூர் செல்லும் வாகனங்கள் பாய்கடை வழியாகவும் போரூர் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.