ஞாயிறு, 6 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: ஞாயிறு, 8 மே 2016 (12:55 IST)

திமுக வெற்றி பெற்றால் மோடிக்கு காவடி தூக்கும் - அருணன் தாக்கு

தப்பித்தவறி திமுக வெற்றிபெற்றால் அதன்ஆட்சி மோடிக்கு காவடி தூக்குகிற ஆட்சியாகத்தான் இருக்கும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பேராசிரியர் அருணன் கூறியுள்ளார்.
 

 
இது குறித்து கூறியுள்ள அருணன், “கலைஞர் மோடியைப் புகழ்ந்து பேசியிருக்கிறார். அவர் நிர்வாகத்திறமை மிக்கவர், எதையும் துணிச்சலோடு செய்யக்கூடியவர், எனது பழைய நண்பர் என்று கூறியுள்ளார்.
 
தமிழகத்தின் மதச்சிறுபான்மையோர் இவரின் இந்தப் பேச்சை கவனத்தில் கொள்ள வேண்டும். தப்பித்தவறி திமுக வெற்றிபெற்றால் அதன்ஆட்சி மோடிக்கு காவடி தூக்குகிற ஆட்சியாகத்தான் இருக்கும்.
குஜராத்தில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதை, ‘அது வேறொரு மாநில விவகாரம்’ என்று சொன்ன புண்ணியவாளர் தான் இவர். ஸ்ரீரங்கம் தேர்தலுக்கு பாஜக ஆதரவை வேண்டியவர்தான் இவர்.
 
“திமுகவோடு பாஜக உறவு வைக்க வேண்டும்“ என்று சு.சுவாமி சொன்ன போது மறுக்காதவர்தான் இவர். இதையெல்லாம் மனதில் கொண்டால் இவரது மோடி துதியின் அர்த்தம் மேலும் தெளிவாகும். மதச் சிறுபான்மையோரே, சமூக நீதியாளர்களே உஷார்... உஷார். மதச்சார்பற்ற அரசியலை உயர்த்திப்பிடிக்க தோற்கடிக்கப்பட வேண்டியது அதிமுக மட்டுமல்ல... திமுகவும்தான்” என்று கூறியுள்ளார்.