செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: புதன், 21 ஜனவரி 2015 (13:13 IST)

படியில் பயணம் செய்யும் மாணவர்களின் இலவச பஸ்பாஸ் ரத்து: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

பேருந்தில் படியில் பயணம் செய்யும் மாணவர்களின் இலவச பஸ்பாஸ் ரத்துச் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
 
சென்னை உள்ளிட்ட பல இடங்களில் கல்லூரி மாணவர்களிடையே வன்முறை சம்பவங்கள் அதிக அளவில் வருகின்றன. இதனால் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளது. மேலும் படிக்கட்டு பயணங்களால் மாணவர்கள் உயிரிழப்புகளும் தொடர்ந்து நடந்து வருகின்றன.
 
இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடும் மாணவர்களைக் கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை உருவாக்க, தமிழக அரசு ஒரு குழுவை அமைத்தது. அந்தக்குழு அளித்த பரிந்துரை அடிப்படையில் புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
 
இந்த வழி காட்டுதல் நெறிமுறைகள் அனைத்துக் கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளது. உயர் கல்வித்துறை அனுப்பி உள்ள இந்தச் சுற்றறிக்கையின் முக்கிய அம்சங்கள்:
 
"மாணவர்கள் சிறிய அளவிலான அசம்பாவித சம்பவங்களில் ஈடுபட்டால் அவர்களுடைய பெற்றோர் கல்லூரிக்கு வரவழைக்கப்பட்டு மாணவர்களுக்கு அறிவுரை வழங்க கேட்டுக் கொள்ளப்படுவார்கள். 2 ஆவது முறையாக வன்முறையில் ஈடுபட்டால் அந்த மாணவரின் அடையாள அட்டை, இலவச பஸ்பாஸ் ஆகியவை குறிப்பிட்ட காலத்துக்குப் பறிமுதல் செய்யப்படும்.
 
தொடர்ந்து வன்முறையில் ஈடுபடும் மாணவரின் ‘டி.சி’ கொடுக்கப்பட்டு, படிப்பில் இருந்தும் அவர் நீக்கப்படுவார். குற்றச்செயல்களில் ஈடுபட்டால் வேறு எந்த கல்லூரியிலும் சேர்ந்து படிக்க முடியாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களை கண்காணிக்க கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்படும்.
 
மாணவர்கள் பஸ் படிக்கட்டில் பயணம் செய்வதால் ஏற்படும் விபத்தை தடுக்க மாநகர போக்குவரத்து அதிகாரிகள் போலீசார் அடங்கிய கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக்குழு படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்களைக் கண்டறிந்து சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வரிடம் தெரிவிக்கும். அதன்பேரில் அந்த மாணவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
 
தொடர்ந்து பஸ் படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவனின் இலவச பஸ்பாஸ் ரத்து செய்யப்படும். பஸ் டே கொண்டாட்டத்துக்கு தடை விதிப்பது, கல்லூரி மாணவர்களுக்கு தனியாக மாநகர பஸ்களை இயக்குவது அடிக்கடி பிரச்சனை ஏற்படும் வழித்தடங்களில் கதவு வைத்த பஸ்களை இயக்குவது ஆகிய நடைமுறைகளை பின்பற்றும்படியும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.