வியாழன், 10 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 10 அக்டோபர் 2024 (16:00 IST)

நீட் தேர்வை கொண்டு வந்த திமுக, ரத்து செய்வதாக இரட்டை வேடம்: எடப்பாடி பழனிசாமி

நீட் தேர்வை கொண்டு வந்ததே திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் என்றும், ஆனால் தற்போது திமுக நீட் தேர்வை ரத்து செய்வதாக இரட்டை வேடம் போடுகிறது என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 
 
நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட மாணவி புனிதாவின் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய எடப்பாடி பழனிசாமி, அதன் பின் செய்தியாளர்களை சந்தித்தார். 
 
அப்போது, நீட் தேர்வு ரத்து செய்ய திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், நீட் தேர்வை கொண்டு வந்த திமுக மற்றும் காங்கிரஸ், நீட் தேர்வு ரத்து செய்வதாக இரட்டை வேடம் போடுகிறது என்றும் தெரிவித்தார்.
 
மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்த போதுதான் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது என்றும், ஆட்சி பொறுப்பை ஏற்று 41 மாதங்கள் ஆகியும் திமுக அரசு நீட் தேர்வு ரத்து செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், இதுவரை நீட் தேர்வை ரத்து செய்த நடவடிக்கை என்ன என்பதை திமுக அரசு சொல்ல முடியுமா என்று கேள்வி எழுப்பினார். 
 
திமுக அரசின் போலி வாக்குறுதிகளால் தான் விலைமதிப்பற்ற உயிர்களை நாம் இழந்து வருகிறோம் என்றும் அவர் கூறினார்.
 
Edited by Mahendran