வெள்ளி, 25 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 25 அக்டோபர் 2024 (10:59 IST)

கள ஆய்வு தொடங்கும்.. சாதனை திட்டங்கள் தொடரும்.. முதல்வர் எழுதிய மடல்..!

Stalin Letter
நமது திராவிட மாடலின் திறனைப் பாராட்டும் விதமாக நாமக்கல் மாவட்ட மக்கள் அளித்த வரவேற்பில் உள்ளம் நெகிழ்ந்தேன்! நமது அரசு நிறைவேற்றி வரும் திட்டங்களின் நிலை குறித்த மாவட்ட வாரியான கள ஆய்வை நவம்பர் 5, 6 தேதிகளில் கோவையில் இருந்து தொடங்குகிறேன். கள ஆய்வுகள் நிறைவுற்றதும் கழகப் பணிகளை ஆய்வு செய்யவுள்ளேன் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு மடல் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
 
அமெரிக்கப் பயணத்திற்கு முன்பாகவே நான் கேட்டுக் கொண்டபடி, அமைச்சர்கள் பலரும், அவரவர் துறை சார்ந்த மற்றும் மாவட்டங்களில் உள்ள பணிகள் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கை அளித்திருந்தனர். அதனை நானும் துணை முதலமைச்சரும் மூத்த அமைச்சர்களும் பார்வையிட்டு, மாவட்டவாரியான ஆய்வுகளுக்குத் திட்டமிட்ட நிலையில், பருவ மழைக்காலம் தொடங்கிவிட்டது.
இந்த ஆண்டு வடகிழக்குப் பருவ மழையின் தொடக்கத்திலேயே சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கனமாகப் பெய்தது.
 
நானும், துணை முதலமைச்சர் உள்ளிட்ட அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் அரசு நிர்வாகத்தினரும் இரவு பகல் பாராமல் களத்தில் நின்று பணியாற்றியதை ஊடகங்களும், பொதுமக்களும் பாராட்டுகின்றனர்.
 
எதிர்வரிசையிலே இருப்பவர்கள். திராவிட மாடல் அரசு மீது அடிப்படையில்லாத அவதூறுகளைப் பரப்ப முனைந்து, அதிலும் முனை முறிந்து போயிருக்கிறார்கள்.
 
அக்டோபர் 22-ஆம் தேதியன்று நாமக்கல் மாவட்டத்தில் 19.50 கோடி ரூபாயில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள டாக்டர் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தைத் திறந்து வைத்தேன்.
 
16 ஆயிரத்து 31 பயனாளிகளுக்கு 146 கோடியே 56 இலட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினேன்.
 
திராவிட மாடல் ஆட்சியில் அறிவிக்கப்படும் திட்டங்களின் செயல்பாடு குறித்து
நவம்பர் 5, 6 தேதிகளில் கோவைக்குச் சென்று கள ஆய்வினைத் தொடங்க இருக்கிறேன். மற்ற மாவட்டங்களிலும் தொடரவிருக்கிறேன்.
 
கள ஆய்வுப் பணிகளை அந்தந்த மாவட்டங்களில் நிறைவு செய்தபிறகு, கழகப் பணிகளையும் ஆய்வு செய்வேன். கண்மணிகளாம் உடன்பிறப்புகளையும் நேரில் கண்டு நெஞ்சம் மகிழ்வேன்.
 
Edited by Mahendran