செவ்வாய், 8 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 8 அக்டோபர் 2024 (11:29 IST)

செல்லூர் ராஜூ செல்லும் இடமெல்லாம் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.. பாஜக அறிவிப்பு..!

முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு செல்லும் இடமெல்லாம் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று பாஜக அறிவித்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில மாதங்களாகவே அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள், பாஜக தமிழக தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். குறிப்பாக, செல்லூர் ராஜு அண்ணாமலையை மிக மோசமாக விமர்சனம் செய்து வரும் நிலையில், அண்ணாமலையை தொடர்ந்து விமர்சனம் செய்வதால் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செல்லும் இடமெல்லாம் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று பாஜக அறிவித்துள்ளது. இது குறித்து மதுரை மாவட்ட பாஜக தலைவர் மகா சுசீந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தொடர்ந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை தரம் தாழ்ந்து விமர்சித்து வருகிறார். அவரை கண்டிக்கிறோம்.

அண்ணாமலை நேர்மையின் அடையாளம். மோடி, வீரத்தின் அடையாளம். சத்ரபதி சிவாஜியை போல் தான் படித்த பட்டங்கள், வகித்த அரசு பதவிகளை நாட்டுக்காக தியாகம் செய்து தமிழக மக்களின் நலன் மற்றும் வளர்ச்சிக்காக அண்ணாமலை பாஜகவில் சேர்ந்தார்.

காட்சியில் சேர்ந்த 3, 4 ஆண்டுகளில் ஆட்சியில் இருக்கும் திமுகவையும், ஆண்ட அதிமுகவையும் அரசியலில் ஆட்டம் காண வைத்து, தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் சக்தியாக உருவெடுத்து வருகிறார். தேச பக்தி நிறைந்த வாக்காளர்களின் துணிச்சல் மிகுந்த தலைவராக வலம் வந்து கொண்டு இருக்கிறார்.

அண்ணாமலையிடம் செல்லூர் ராஜூ மன்னிப்பு கேட்ட வேண்டும். தவறினால் தகுதி இல்லாமல் ஜெயலலிதாவின் காலில் விழுந்து பதவி பெற்று, பல கோடி ரூபாய் ஊழல் செய்து அரசியல்வாதியாக காட்டி வரும் செல்லூர் ராஜூவுக்கு எதிராக அவர் செல்லும் இடமெல்லாம் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.”

Edited by Mahendran