1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 19 மார்ச் 2025 (17:45 IST)

ரூ.38 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்திய இளம்பெண்.. பெங்களூரு விமான நிலையத்தில் கைது..!

Women Arrest
துபாயில் இருந்து பெங்களூருக்கு தங்கம் கடத்தி வந்த நடிகை ஒருவர் சமீபத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது கத்தாரில் இருந்து ரூ.38 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை கடத்தி வந்த இளம்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனை அடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

கத்தாரில் இருந்து பெங்களூருக்கு வரும் விமானத்தில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அதிகாரிகள் விமானத்தில் வந்த பயணிகள் அனைவரையும் கண்காணித்தனர்.

அப்போது, ஒரு இளம் பெண் சந்தேகத்திற்கு இடமாக இருப்பதை கவனித்த அதிகாரிகள், அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் போது, அவரிடம் 38 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்தனர்.  அவரது பெயர் மற்றும் விவரங்களை அதிகாரிகள் வெளியிடவில்லை. அவர் பெங்களூரில் யாருக்காக போதைப்பொருளை கடத்தி சென்றார்? கத்தாரில் யாரிடமிருந்து இது கடத்தப்பட்டது? போன்ற விவரங்களை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

துபாயிலிருந்து ஒரு நடிகை 12 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் கடத்திய செய்தி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இப்போது 38 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளை ஒரு இளம் பெண் கடத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva