நாக்பூர் வன்முறை முன்பே திட்டமிட்டு நடத்தப்பட்டது: முதல்வர் பட்நாவிஸ் குற்றச்சாட்டு..!
நாக்பூரில் நடந்த சமீபத்திய கலவரம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டதாக மகாராஷ்டிர மாநில முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் தெரிவித்துள்ளார்.
முகலாய பேரரசர் ஒளரங்கசீப்பின் கல்லறையை அகற்ற வேண்டும் என சில அமைப்புகள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தளம் அமைப்புகள் மாநிலம் முழுவதும் நேற்று போராட்டங்களை நடத்தின.இந்த போராட்டத்தில் வெடித்த வன்முறையில் 15 போலீசார் உள்பட 20 பேர் காயமடைந்தனர். மேலும், நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரையாகின.
இந்த சம்பவம் குறித்து மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் கூறியதாவது:
"இந்தக் கலவரம் சுயம்பாக ஏற்பட்டதாக தோன்றவில்லை. இதில் ஈடுபட்டவர்கள் முன்கூட்டியே ஆயுதங்களுடன் தயாராக இருந்தனர். குறிப்பிட்ட சமூகத்தினரின் கடைகள் மற்றும் வீடுகளை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இது திட்டமிட்ட வன்முறையாகத் தெரிகிறது. "சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் எந்தக் குழுவாக இருந்தாலும், மதம் பாராது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,
மேலும், சமீபத்தில் வெளியான 'சாவா' திரைப்படம் சாம்பாஜி மகாராஜா குறித்த உண்மையான வரலாற்றை மக்களிடம் எடுத்துச் சென்றதாக இருந்தாலும், ஒளரங்கசீப்புக்கு எதிராக மக்களின் உணர்வுகளைத் தூண்டியிருக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
"அரசியலுக்கும் மதத்திற்கும் இடையே மோதல் ஏற்படுத்துபவர்களை பொறுத்துக் கொள்ள முடியாது. இந்த கலவரங்கள் மாநிலத்தின் முதலீடுகளுக்கும் பொருளாதாரத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும். மக்கள் ஒருவரை ஒருவர் மதித்து, சகோதரத்துவத்தை பேண வேண்டும்," என்று முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் வலியுறுத்தினார்.
Edited by Mahendran