1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 12 மார்ச் 2025 (14:15 IST)

ஆட்சிக்கு வந்ததும் முஸ்லிம் எம்.எல்.ஏக்களை சட்டசபையில் இருந்து வெளியேற்றுவோம்: பாஜக

suvendu adhikari
ஆட்சிக்கு வந்ததும் முஸ்லிம் எம்எல்ஏக்களை சட்டசபையில் இருந்து வெளியேற்றுவோம் என மேற்குவங்க பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
தமிழ்நாடு போலவே மேற்குவங்கத்திலும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் ஒரு புறமும், பாஜக இன்னொரு புறமும் தீவிர போட்டியில் உள்ளன. காங்கிரஸ் இந்த மாநிலத்தில் என்ன செய்யப் போகிறது என்பது இன்னும் தெளிவாகவில்லை.
 
இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மேற்குவங்க பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி, "மேற்கு வங்கத்தில் முஸ்லிம் லீக்  போலவே மம்தா அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது. மேற்குவங்க மக்கள் மம்தா கட்சியை  வேரோடு பிடுங்கி எறிவார்கள்" என்று தெரிவித்தார். 
 
மேலும், "2026 ஆம் ஆண்டு நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் முஸ்லிம் எம்எல்ஏக்களை சட்டசபையில் இருந்து வெளியேற்றுவோம்" என்ற அவரின் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
இது குறித்து திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:
"சுவேந்து அதிகாரியின் கருத்து ஆட்சியரீதியாக மிக மோசமானது. ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த எம்எல்ஏக்களை வெளியேற்றுவோம் என கூறுவது ஆபத்தான மனநிலை. இது இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது மற்றும் ஒரு குற்றச் செயலாகும்" என அவர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran