கவர்னரை கையோடு கூட்டிகிட்டு நிதி கேட்க சென்ற கேரள முதல்வர்.. தமிழக முதல்வர் பின்பற்றுவாரா?
பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களை தவிர மற்ற மாநிலங்களுக்கு நிதி வழங்குவதில் மத்திய அரசு சிக்கல் ஏற்படுத்தி வருகிறது என்று கூறப்படும் நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆளுநருடன் டெல்லி சென்று மத்திய நிதி அமைச்சரை சந்தித்து நிதி கேட்டிருப்பது புத்திசாலித்தனமாக பார்க்கப்படுகிறது.
கேரளாவுக்கு புதிய ஆளுநராக ராஜேந்திர விசுவாத் நியமனம் செய்யப்பட்ட நிலையில், அவரும் பினராயி விஜயனும் நட்பு பாராட்டி வருகிறார். குடியரசு தின விழாவில் நடைபெற்ற தேநீர் விருந்தில் முதல்வர் பினராயி விஜயன் கலந்து கொண்டு ஆளுநரிடம் அன்பை பரிமாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில்,கேரளாவுக்கு நிதி ஒதுக்காமல் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக கூறப்பட்ட நிலையில், ஆளுநருடன் இணைந்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை, பினராயி விஜயன் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது, கேரளாவுக்கான நிதியை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேபோல், வேறு சில மத்திய அமைச்சர்களையும் சந்திக்க திட்டமிட்டிருப்பதாகவும், இதனால் நிதி எளிதில் கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது. இதே முறையை தமிழக முதல்வரும் பின்பற்றுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
Edited by Mahendran