புதன், 25 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வியாழன், 22 செப்டம்பர் 2016 (04:48 IST)

தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது - நீதிமன்ற தீர்ப்பை நிராகரித்த சித்தராமையா

உச்சநீதிமன்ற உத்தரவின்படி, தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்துவிடும் முடிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார்.
 

 
தமிழ்நாட்டுக்கு இம் மாதம் 21-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை தினசரி 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. நான்கு வாரங்களுக்குள் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
 
இந் நிலையில், இதுபற்றி ஆய்வு செய்ய, புதன்கிழமை காலை கர்நாடக அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நடந்தது. அந்த கூட்டத்தில் உச்சநீதிமன்றத்தீர்ப்பு குறித்து முழுமையாக விவாதிக்கப்பட்டது.
 
தேவகௌடா, மல்லிகார்ஜுன கார்கே, குமாரசாமி, வீரப்ப மொய்லி உள்ளிட்ட தலைவர்கள் பேசி தங்கள் கட்சிகளின் நிலையை வெளிப்படுத்தினர். பிரதான எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா கலந்துகொள்ளவில்லை.
 
பின்னர் சித்தராமையா பேசும்போது, ”தமிழகத்திற்கு விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீரை கொடுக்க காவிரி மேற்பார்வைக்குழு எடுத்த முடிவை மாற்றி, தண்ணீரின் அளவை விநாடிக்கு 6 ஆயிரம் கன அடியாக உயர்த்தி வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது எந்த அடிப்படையில் என்பது விளங்கவில்லை.
 
உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை அமல்படுத்துவது நடைமுறை சாத்தியமற்றதாகும். தமிழக அரசின் முன்மொழிவு இல்லாமலே, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு வழிகாட்டுதல் வழங்கியுள்ளது சரியானதல்ல.
 
உச்சநீதிமன்ற இடைக்கால தீர்ப்பு குறித்து சட்டப்பேரவையில் விவாதித்து தீர்மானம் எடுக்கும் வரை தமிழகத்திற்கு காவிரி தண்ணீரை திறந்துவிடுவது குறித்த முடிவை ஒத்திவைக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது” என்று சித்தராமையா தெரிவித்தார்.