1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : புதன், 1 அக்டோபர் 2014 (12:29 IST)

ஜீவா – திரை விமர்சனம்

ஜீவா – திரை விமர்சனம்
தனது சிறு வயதிலிருந்தே ஒரு நாளாவது இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாட வேண்டும் என்ற கனவுடன் வாழத் தொடங்கும் சாதாரண இளைஞரின் கனவு, லட்சியம். அது எவ்வாறு அரசியல் மற்றும் அதிகார மையத்தினால் பந்தாடப்படுகிறது என்பதும், இந்த அதிகார மையத்தின் பந்தாட்டத்தில் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதும்தான் ஜீவா படத்தின் கரு.
 
எல்லோரையும் போலவே தனது வீட்டிலிருந்து, தெருவிலிருந்து தொடங்குகிறது கிரிக்கெட் விளையாட்டின் உலகம். தாயை இழந்தவரான விஷ்ணு(ஜீவா)விற்குப் பக்கத்து வீட்டில் வசிக்கும் சார்லியும் அவரது குடும்பத்தின் ஆதரவும் ஆறுதலாய் அமைகிறது. சார்லியை அவரது தந்தையைப் போலவே கருதுகிறார்.
 
ஒருநாள் கடைத்தெருவில் உள்ள மளிகைக் கடையில் உள்ள தொலைக்காட்சியில் கிரிக்கெட் போட்டியை ஒளிபரப்புகிறார்கள். ஜீவா, சச்சின் ஆட்டத்தைப் பார்கிறார். அங்கே ஆட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் அனைவரும் சச்சின் ஆட்டமிழந்ததும் டி.வி.-ஐ நிறுத்திவிடுகிறார்கள். அதிலிருந்து ஜீவாவுக்கு சச்சின் மீதும் கிரிக்கெட்டின் மீதுமான மரியாதை கூடுகிறது. இந்திய அணிக்காகத் தானும் ஆடவேண்டும் என்ற வேட்கையும் அதிகமாகிறது.

ஜீவா – திரை விமர்சனம்
 
அதன் பிறகு ஜீவா தூங்கும்போதும் விழிக்கும்போதும், பள்ளியில் இருக்கும் போதும் கிரிக்கெட் பற்றிய சிந்தனையைத் தவிர வேறு எதுவும் இல்லை.
 
அந்தச் சமயத்தில் அவரது பக்கத்து வீட்டில் குடியேறுகிறார் ஸ்ரீதிவ்யா(ஜெனி). முதல் சந்திப்பிலிருந்தே விஷ்ணுவை ‘அண்ணா’ என்று அழைக்கத் தொடங்கும் ஸ்ரீதிவ்யா, விஷ்ணு மீதான நேசம் காதலாக மாறும் வரையில் அப்படித்தான் அழைக்கிறார். இடையில் விஷ்ணுவிடம் ஒயின் குடித்து மாட்டிக்கொள்வது, அப்பா சட்டைப் பையிலிருந்து பணத்தைத் திருடி, புத்தகத்தில் ஒளித்து வைத்திருப்பது தெரிய வருவது எனப் பள்ளிக் காலச் சேட்டைகள்.
 
இடையே விஷ்ணுவிற்கும் ஸ்ரீதிவ்யாவிற்குமான பழக்கம், காதலாக மாறுகிறது. பிறகு அது வீட்டிற்குத் தெரிய வருகிறது. ஸ்ரீதிவ்யா வேறு ஒரு பள்ளிக்கு மாறிச் சென்றுவிடுகிறார். உடனே விஷ்ணு மது அருந்துவதும் பெண்கள் இப்படித்தான் விட்டுப் போய் விடுவார்கள் என்ற பொருளில் பாடலும் பாடுகிறார். தமிழ் சினிமாவில் பெண்கள் மேல் பழிபோடும் படலம் முடியவே முடியாது போலிருக்கிறது. (இதற்கு சுசீந்திரனும் விதிவிலக்கல்ல). 
 
விஷ்ணுவின் திறமையைக் கண்டுகொள்ளும் பயிற்சியாளர் ரவி, தனது அணியில் சேர்த்துக்கொண்டு கடுமையாகப் பயிற்றுவிக்கிறார். ‘முடியாததை முடிக்கும் போதுதான் அது ரெக்கார்டாக மாறும்’ என்று கூறித் தெம்பூட்டுகிறார். இடையில் விஷ்ணுவின் நண்பனாக வந்து சேர்கிறார் லட்சுமணன் (ரஞ்சித்). இருவரும் தங்களது அசாத்திய திறமையினால் அவர்களது அணி வெற்றி மேல் வெற்றியைக் குவிக்கிறது. மாநில அளவிலான போட்டியில், அவர்களது ஆட்டத்தைக் கண்டு கொள்கிறார்கள் அணித் தேர்வாளர்கள். அதன் பிறகுதான் கிரிக்கெட்டின் உண்மையான ஆ(சூதா)ட்டம் ஆரம்பமாகிறது.
மேலும்

அந்தப் போட்டியின் இறுதியில், தொடர் நாயகன் விருதுபெறும் விஷ்ணுவின் முதுகை, அணியின் தேர்வாளர் தட்டிக் கொடுப்பது போல் தடவிப் பார்த்து, சாதி அடையாளத்தைக் கண்டுகொள்வது, தவிர்க்கவே முடியாத பட்சத்தால் மட்டும் இவர்களைத் தமிழகத்திற்கான ரஞ்சி அணியில் தேர்வு செய்வது, அப்போதும்கூட அவர்களைக் களத்தில் இறக்காமல், வெளியில் இருந்து குளிர்பானங்கள் கொடுக்க மட்டுமே பயன்படுத்துவது, கடைசியில் இருவரையும் அணியிலிருந்து விலக்குவது வரையில் அதிகார மற்றும் ஆதிக்கக் குழுவினரின் மோசடியான ஆட்டத்தைத் தோலுரித்துக் காட்டுகிறார் இயக்குநர் சுசீந்திரன்.
 
விஷ்ணு, நல்ல கிரிக்கெட் வீரராகப் பின்னி எடுத்திருக்கிறார். உழைப்பும் ஈடுபாடும் நன்றாகத் தெரிகிறது. இயல்பிலேயே கிரிக்கெட் வீரராக அவர் இருப்பதும் ஒரு காரணமாக இருந்தாலும் நன்றாக நடித்திருக்கிறார்.
 
ரஞ்சித் நல்ல வீரராகவும், நண்பனாகவும் வருகிறார். ‘நாம ரெண்டு பேரும் கண்டிப்பா இந்திய அணிக்காக விளையாடுவோம்’ என்று கூறும் போதும் சரி, இருவரையும் அணியில் இருந்து நீக்கிய பின்னர் ரஞ்சித், தமிழக கிரிக்கெட் வாரியத் தலைவரிடம், “இதுவரைக்கும் தமிழ்நாட்டிலிருந்து இந்திய அணிக்காக 14 பேர் தேர்வாகி இருக்காங்க, அதுல 12 பேர் உங்க ஆளுங்கதான். ஏன் சார்? எங்க ஆளுங்ககிட்டேயும் திறமையான ஆளுங்க இருக்காங்க சார்” என்று கோபப்படுகிறார். 

ஜீவா – திரை விமர்சனம்
 
அதற்கு அதிகாரி “எங்க ஆளுங்களும் திறமையான ஆளுங்கதான்” என்று சொல்லும் போது, “அப்புறம் ஏன் சார் தமிழ்நாடு ரஞ்சி போட்டி ஃபைனலுக்கு போய் 10 வருஷம் ஆவுது” என்று கேள்வியெழுப்பும் போதும் சரி நடிப்பில் அசத்தியிருக்கிறார். அவரின் தற்கொலை, திறமையான ஆனால் வாய்ப்பு கிடைக்காமல் வாழ்க்கையைத் தொலைத்துவிட்டிருக்கும் பல லட்சக்கணக்கான இளைஞர்களின் தற்கொலை.
 
இதற்குப் பதிலாக சுசீந்திரனின், “எல்லா நாட்டுலேயும் பிளேயர்ஸ் விளையாடித்தான் தோத்து போறாங்க. ஆனா நம்ம நாட்டுல மட்டும்தான் வாய்ப்பு கிடைக்காமலே தோத்துப் போயிடுறோம்” என்ற வசனம் நிஜத்திலும் நிஜம்.
 
ஸ்ரீதிவ்யா தனது வேலையைக் கச்சிதமாகச் செய்திருக்கிறார். கண்களில் குறும்பும் காதலும் மிளிர்கின்றன.
 
சூரி சீனியர் ஆட்டக்காரராக வந்து செல்லும் காட்சிகளில் கலகலப்பூட்டுகிறார். அதிலும் அவர் சொல்லும் வசனங்கள், சிரிப்பு வரவைப்பதைத் தடுக்க முடியவில்லை.
 
சாதாரண குடும்பத்துத் தந்தையாக நடித்துள்ள மாரிமுத்து, தன் மகனது ஆட்டத்தைக் காண வந்து அவன் வீரர்களுக்குக் குளிர்பானம் கொடுத்துவிட்டு வரும்போது ‘என்ன சார், அவன் இன்னைக்கு விளையாடவில்லையா என்று கேட்டு ஏங்கும் காட்சியிலும், ‘கிரிக்கெட்டு எல்லாம் பணக்காரங்க விளையாட்டு சார், நமக்கெல்லாம் அது சரியா வராது’, என்று எரிந்து விழும் காட்சியிலும் பிரமாதம்.
 
ஜீவாவின் இன்னொரு தந்தையாக, பக்கத்து வீட்டுக்காரராக வரும் சார்லி, நிறைய காட்சிகளில் நம்மை நெகிழ வைக்கிறார்.
 
இமானின் இசையில் ’ஒருத்தி மேலே மீண்டும்’ பாடலும் படமாக்கப்பட்ட விதமும் ரசிக்கலாம். 
 
இதுவரை யாரும் தொடாத, விளையாட்டில் நடக்கும் இன்னொரு கோர விளையாட்டைத் தொட்டதற்காக சுசீந்திரன் நன்றிக்கு உரித்தானவர். ஆனால் நாயகன் விஷ்ணு எல்லா ஆட்டங்களிலும் கடைசி வரை ஆட்டமிழக்காத மட்டை ஆட்டக்காரராக வருவது கொஞ்சம் அதிகப்படியாகவும் சலிப்பையும் ஏற்படுத்துகிறது. 
 
அணியை ஒற்றை ஆளாகக் காப்பாற்றுவது போல இருக்கிறது. இதனால் மற்ற ஆட்டக்காரர்கள் யாரையும் கண்டுகொள்ள முடியவில்லை. ’கடுமையாக உழைக்கும் ஒவ்வொரு வீரனுக்கும் மேஜிக் கண்டிப்பாக நடக்கும்’ என்று சொல்கிறார் சுசீந்திரன். அப்புறம் ஏன் சார், ரஞ்சித்திற்கு அந்த மேஜிக் வரவில்லை. உழைப்பிற்கும் மேஜிக்கிற்கும் சம்பந்தமே இல்லையே. 
 
இதுபோன்ற ஒருசிலவற்றைத் தவிர்த்துவிட்டு பார்த்தால் ஜீவா, அருமையான ஆட்டம்.