புதுச்சேரி சித்தவிநாயகர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

Written By Mahendran
Updated: வியாழன், 4 செப்டம்பர் 2025 (18:53 IST)
புதுச்சேரி  சித்தி விநாயகர் கோவிலில் திருப்பணிகள் நிறைவடைந்து, இன்று  மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
 
முன்னதாக, கும்பாபிஷேக விழா கடந்த திங்கள்கிழமை, விக்னேஸ்வர பூஜை மற்றும் கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து தொடர்ந்து நான்கு நாட்களாக யாக பூஜைகள், ஹோமங்கள் நடைபெற்றன. இன்று காலை 5 மணிக்கு ரக்ஷாபந்தனம், தேவதா பூர்ணாஹுதி ஆகியவை நடத்தப்பட்டன. பின்னர், காலை 8 மணிக்கு தீபாராதனையும், கலசப் புறப்பாடும் நடைபெற்றன.
 
சரியாக 9 மணிக்கு, கோவிலின் அனைத்து விமான கோபுரங்களுக்கும் புனிதநீர் தெளிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, காலை 10 மணிக்கு மூலஸ்தானத்தில் உள்ள சித்தி விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், பல்வேறு புனித நதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட நீர் கலசங்கள் மூலம் அபிஷேகம் செய்யப்பட்டது.
 
இந்த கும்பாபிஷேக விழாவில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சிவகுமார், பா.ஜ.க நகர மாவட்ட தலைவர் சக்தி.கிருஷ்ணராஜ் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், பிரபல தொழிலதிபர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக விழாவின் புனிதமான தருணங்களை பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கண்டு களித்தனர்.
 
Edited by Mahendran

அடுத்த கட்டுரையில்
Show comments