ஒரே பிட்ச்சில் விளையாடுவது சாதகமான அம்சம்தான்… கம்பீர் கருத்துக்கு எதிராக பேசிய ஷமி!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நேற்று நடந்த சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று முதல் அணியாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. அதே போல தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி நியுசிலாந்து அணியும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
இந்த தொடர் முழுவதும் இந்திய அணி துபாய் சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் விளையாடுவது அது சாதகமான அம்சமாக மற்ற நாட்டு அணிகளால் குற்றம் சாட்டப்படுகிறது. இதுபற்றி பேசிய பயிற்சியாளர் கம்பீர் “து எப்படி மற்ற அணிகளுக்கு பொதுவான மைதானமோ. அதுபோலதான் எங்களுக்கும். நாங்கள் இந்த மைதானத்தில் இதற்கு முன்னர் பயிற்சி கூட செய்ததில்லை. ஐசிசி கிரிக்கெட் அகாடெமியில்தான் பயிற்சி செய்தோம். ஆனால் இதுபற்றி தொடர்ந்து சிலர் தொட்டிலில் ஆடும் குழந்தைகள் போல பேசி வருகின்றனர்” எனக் காட்டமாகப் பதிலளித்திருந்தார்.
ஆனால் கம்பீரின் இந்த கருத்துக்கு மாறாக இந்திய பவுலர் ஷமி பேசியுள்ளார். அதில் “நாங்கள் ஒரே மைதானத்தில் விளையாடுவது உதவியாக உள்ளது. ஏனெனில் இந்த ஆடுகளத்தின் தன்மை மற்றும் சூழலை அறிந்து ஆட முடிகிறது. அனைத்து போட்டிகளையும் ஒரே மைதானத்தில் ஆடுவது சாதகமான அம்சம்தான்” எனப் பேசியுள்ளார்.