இனி அவரைப் போன்ற வீரர்களுக்குதான் அதிகம் ஆதரவு தரப்போகிறோம்.. கம்பீர் கருத்து!
இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீருக்கு ஒரு ஆறுதலாக சமீபத்தில் நடந்த இங்கிலாந்து அணிக்கெதிரான டி 20 தொடர் அமைந்திருக்கும். வரிசையான டெஸ்ட் தொடர் தோல்விகளால் கடும் விமர்சனத்துக்கு ஆளாகியிருந்த அவருக்கு இந்திய அணி இந்த தொடரை 4-1 என்ற கணக்கில் வென்றது புத்துணர்ச்சியைக் கொடுத்திருக்கும்.
இந்நிலையில் தொடருக்குப் பின்னர் பேசியுள்ள கம்பீர் “இனிமேல் அணியில் அபிஷேக் ஷர்மா போன்ற வீரர்களுக்கு அதிக ஆதரவு தரப்போகிறோம். 140 முதல் 150 கிமீ வரை வீசப்படும் பந்துகளுக்கு எதிராக இப்படி ஒரு சதத்தை எந்தவொரு கிரிக்கெட் வீரரும் அடித்து நான் பார்த்ததில்லை.” எனக் கூறியுள்ளார்.
நேற்று நடந்த கடைசி டி 20 போட்டியில் அபிஷேக் ஷர்மா 54 பந்துகளில் 135 ரன்கள் சேர்த்து அவுட்டானார். அவரது இந்த இன்னிங்ஸில் 7 பவுண்டரிகளில் 13 சிக்ஸர்களும் அடக்கம். இதன் மூலம் டி 20 போட்டிகளில் இந்தியர் ஒருவர் சேர்த்த அதிகபட்ச ஸ்கோர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். இந்த இன்னிங்ஸில் அவரின் ஸ்ட்ரைக் ரேட் 250. சமீபகாலமாக முதல் பந்து முதலே பவுண்டர்களை அடிக்கும் ஒரு அதிரடி பேட்ஸ்மேனாக உருவாகி வருகிறார் இளம் வீரரான அபிஷேக் ஷர்மா.