இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி குறிப்பிட்ட கெடுவுக்குள் பிணைக்கைதிகளை ஒப்படைக்காவிட்டால் ஒப்பந்தம் ரத்தாகும் என ஹமாஸ்க்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே தொடர்ந்து வந்த போரை அமெரிக்க அதிபராக வந்த ட்ரம்ப் போர் நிறுத்த ஒப்பந்தம் மூலம் நிறுத்தியதுடன், இஸ்ரேல் பிணைக்கைதிகளை ஹமாஸ் ஒப்படைத்தால், பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவிக்கும் என பேசி வைத்தார். அதன்படி இருதரப்பிலும் கைதிகள் பரிமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். ஆனால் சமீபமாக ஹமாஸ் பல முக்கிய பிணைக்கைதிகளை விடுவிக்காமல் இருந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் ஹமாஸ் அமைப்பை எச்சரிக்கும் விதமாக டொனால்டு ட்ரம்ப் பேசியுள்ளார். அதன்படி, பிப்ரவரி 15ம் தேதி பகல் 12 மணிக்குள் அனைத்து இஸ்ரேலிய பிணைக்கைதிகளையும் ஹமாஸ் விடுவிக்காவிட்டால் போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு பெரிய அளவில் தாக்குதல் நடத்தப்படும் என ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் காசாவை முழுவதுமாக அமெரிக்க ராணுவம் எடுத்துக் கொள்ளும் என்றும், அதை முழுமையாக மாற்றியமைப்பதன் மூலமாக ஹமாஸ் மீண்டும் தலைதூக்காமல் இருப்பதை உறுதி செய்ய முடியும் என ஜோர்டான் மன்னரிடம் திட்டவட்டமாக கூறிவிட்டாராம் ட்ரம்ப். ட்ரம்பின் இந்த அதிரடி நடவடிக்கைகளால் மத்திய தரைக்கடலில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
Edit by Prasanth.K