செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 5 பிப்ரவரி 2019 (06:57 IST)

விஜய்மல்லையா அப்பீல்: இந்தியா அழைத்து வருவதில் சிக்கலா?

இந்திய வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்ற தொழிலதிபர் விஜய்மல்லையா, கடனை திரும்ப செலுத்தாமல் பிரிட்டனுக்கு தப்பியோடிவிட்டார். அவரை இந்தியா அழைத்து வர மத்திய அரசு சட்டரீதியாக எடுத்த முயற்சியின் அடிப்படையில் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தலாம் என  கடந்த ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதி இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் இங்கிலாந்து நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து மல்லையா மேல் முறையீடு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

விஜய் மல்லையாவை நாடு கடத்த அந்நாட்டின் உள்துறை அமைச்சகத்துக்கு நீதிமன்றம் பரிந்துரை செய்திருந்த நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவின்படி விஜய்மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க, இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில் தற்போது நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் முயற்சியில் விஜய்மல்லையா உள்ளார்.

இதுகுறித்து விஜய்மல்லையா தனது டுவிட்டர் பக்கத்தில் டிசம்பர் 10ஆம் தேதி என்னை இந்தியாவிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் உள்துறை அமைச்சகத்தின் நடவடிக்கையை அடுத்து தற்போது அப்பீல் செய்யவுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார். விஜய்மல்லையா மேல்முறையீடு செய்தால் அவரை இந்தியா அழைத்து வருவதில் காலதாமதம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.