1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 24 ஏப்ரல் 2022 (15:17 IST)

மக்கள் தஞ்சமடைந்த ஆலை மேல் தாக்குதல்! – வரம்பு மீறும் ரஷ்யா!

உக்ரைன் வீரர்களை சரணடைய சொல்லி ரஷ்யா கூறியும் அவர்கள் மறுத்ததால் பொதுமக்கள் தஞ்சமடைந்துள்ள ஆலையை ரஷ்யா தாக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கி பல நாட்களாகியுள்ள நிலையில் உக்ரைனின் பல பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. ரஷ்யாவின் தாக்குதலினால் பல லட்சம் மக்கள் உக்ரைனை விட்டு வெளியேறி அகதிகளாக அடைக்கலம் தேடி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

ரஷ்யாவின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள உலக நாடுகள் பல உக்ரைனுக்கு பொருளாதார மற்றும் ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன. இதனால் தொடர்ந்து உக்ரைன் ராணுவமும் ரஷ்யா மீது பதில் தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் இரு தரப்பிலுமே பல ராணுவ வீரர்கள் பலியாகி வருகின்றனர்.

உக்ரைனைன் மரியோபோல் நகரில் இரு நாட்டு படைகளுக்கும் இடையே கடந்த சில நாட்களாக கடும் மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில் மரியோபோலில் உள்ள உக்ரைன் வீரர்களை சரணடைய சொல்லி ரஷ்யா காலக்கெடு நிர்ணயித்தது. காலக்கெடு முடிந்த நிலையில் உக்ரைன் ராணுவம் சரணடையவில்லை.

இதனால் உக்ரைன் வீரர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் பதுங்கியுள்ள மரியுபோலின் எக்கு ஆலை மீது தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக ஓடேசா நகரம் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 3 மாத குழந்தை உட்பட 6 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.