1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 26 டிசம்பர் 2021 (14:32 IST)

பிரபஞ்சத்தின் தொடக்கத்தை தொடும் முயற்சி! – விண்வெளியில் வெற்றிகரமாக ஜேம்ஸ்வெப்!

விண்வெளி ஆராய்ச்சிக்காக நாசாவின் நீண்ட நாள் திட்டமான ஜேம்ஸ்வெப் தொலைநோக்கி வெற்றிகரமாக தனது விண்வெளி பயணத்தை தொடங்கியுள்ளது.

விண்வெளி ஆராய்ச்சியை பல நாட்டு விண்வெளி ஆய்வு மையங்கள் மேற்கொண்டு வந்தாலும், அதில் முன்னொடியாக நாசா விளங்குகிறது. இந்நிலையில் விண்வெளியில் உள்ள கோள்கள், மற்ற அண்டங்கள், நட்சத்திரங்கள் ஆகியவற்றை ஆராய்வதில் நாசா பல காலமாக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

நாசா முன்னதாக விண்வெளிக்கு அனுப்பியிருந்த ஹபிள் டெலஸ்கோப் பல்வேறு நட்சத்திர மண்டலங்களையும், நெபுலாக்களையும் புகைப்படம் எடுத்து அனுப்பி இருந்தது. அதன் காலம் கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்ட நிலையில் ஹபிளை விட மிகவும் துல்லியமாக விண்வெளியை படம் பிடிக்க கூடிய ஜேம்ஸ்வெப் டெலஸ்கோப்பை நாசா தயாரித்துள்ளது. கடந்த பல வருடங்களாக தயாரிப்பில் உள்ள இந்த தொலைநோக்கி கொரோனா உள்ளிட்ட பல காரணங்களால் விண்வெளிக்கு அனுப்பப்படுவது தாமதப்படுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில் இன்று லத்தீன் அமெரிக்காவின் பிரெஞ்சு கயானா பகுதியிலிருந்து இந்த தொலைநோக்கி வெற்றிகரமாக விண்வெளியில் ஏவப்பட்டுள்ளது. பூமியிலிருந்து சுமார் 1.5 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்படும் இந்த தொலைநோக்கியானது இலக்கை அடைந்து 30 நாட்களில் புகைப்படங்களை பூமிக்கு அனுப்பும். உலகிலேயே மிகப்பெரிய தொலைநோக்கியான ஜேம்ஸ்வெப்பை தயாரிக்க 10 பில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டுள்ளது.