வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 4 செப்டம்பர் 2018 (19:57 IST)

இந்த அரசாங்கம் பத்திரிகை சுதந்திரத்தை மதிக்கும் என்ற நம்பிக்கையைச் சிதைத்துவிட்டது: மியான்மா்

மியான்மரில் ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த வன்முறைகளை வெளிக்கொண்டு வந்ததற்காக 7 ஆண்டு சிறைத்தண்டனை பெற்ற பத்திரிகையாளர்களுக்கு ஆதரவுக் குரல்கள் அதிகரித்து வருகின்றன.
 
மியான்மரின் ராக்கைன் மாகாணத்தில் முஸ்லிம்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். நீண்டகாலமாக வசித்து வரும் இவர்களுக்கு குடியுரிமை வழங்க அந்நாட்டு அரசு மறுத்து வருகிறது. அங்கு முஸ்லிம்களுக்கும் புத்த மதத்தினருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. 
 
இந்த மோதல் கடந்த ஆகஸ்ட் மாதம் உச்சகட்டத்தை எட்டியது. முஸ்லிம்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டதுடன், அவர்களது வீடுகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களும் நடந்தன. இதில் அந்நாட்டு ராணுவமும் முஸ்லிம்களுக்கு எதிராகத் தாக்குதலில் ஈடுபட்டது.
 
இதனால், அங்கிருந்து தப்பிய ரோஹிங்கியா முஸ்லிம்கள் பக்கத்து நாடான வங்கதேசத்தில் அகதிகளாகக் குடியேறினர். இந்த நிலையில் ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிராக மியான்மரில் நடந்த தாக்குதலையும், அதில் அந்நாட்டு ராணுவத்தின் பங்கு இருந்ததையும் வெளிக்கொண்டு வந்த ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் இரு பத்திரிகையாளர்களான வோ லோன் (32) மற்றும் யாவ் சோ ஓ (28) ஆகிய இருவருக்கும் மியான்மர் நீதிமன்றம் 7 ஆண்டு சிறைத்தண்டணை விதித்துள்ளது.
 
இந்த நிலையில்  மியான்மரில் பிரபலமான, அதிக அளவிலான வாசகர்களைக் கொண்ட  7 Day Daily பத்திரிகை முகப்புப் பக்கத்தை  கருமை நிற வண்ணத்தில் வெளியிட்டு பத்திரிகையாளர்களின்  கைதுக்கு எதிரான தங்களது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.  மேலும், "இந்த அரசாங்கம் பத்திரிகை சுதந்திரத்தை மதிக்கும் என்ற நம்பிக்கையைச் சிதைத்துவிட்டது" குறிப்பிட்டுள்ளது.