1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 22 ஜூன் 2016 (15:01 IST)

பெண் பாலியல் கொலை - ’கொலைகாரர்களே வெளியேறுங்கள்’ என அமெரிக்காவிற்கு எதிராக ஜப்பானியர்கள் போராட்டம்

கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வகையில், ஜப்பானின் ஒகினாவா மாகாணத்தில் அமெரிக்க ராணுவத்திற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களில் பங்கேற்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
 

 
அமெரிக்காவின் ஒகினாவா மாகாணத்தில் ஆயிரக்கணக்கான அமெரிக்க ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். ஏராளமான ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளன. கடந்த மாதத்தில் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதில் குற்றவாளி அமெரிக்கக் கப்பற்படையைச் சேர்ந்தவர்.
 
ஆனால், அவர் மீது இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஏராளமான ஆய்வுகள் நடப்பதாக மட்டும் செய்தி வெளியிட்டு வருகிறார்கள். அவர் குற்றவாளி என்று தெரிந்தாலும் ஜப்பான் சட்டங்களின்படி அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. விசாரணையைக்கூட அமெரிக்க ராணுவமே மேற்கொள்ளும்.
 
இதுபோன்ற குற்றங்கள் தொடர்கதையாகி வருவதால் தங்கள் மண்ணை விட்டு அமெரிக்க ராணுவத்தினர் வெளியேற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
 

 
ஒகினாவா மாகாணத்தில் நடைபெற்ற பேரணியில் கடந்த 20- 30 ஆண்டுகளில் காணாத அளவுக்கு பெரும் எண்ணிக்கையில் மக்கள் பங்கேற்றனர். 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அதில் கலந்து கொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
"முகாம் வேண்டாம் என்றும், கொலைகாரர்களே வெளியேறுங்கள்" என்று எழுதிய அட்டைகளை ஏந்தியவாறு மக்கள் பங்கேற்றனர். ஒகினாவா முழுவதும் அமெரிக்க ராணுவ எதிர்ப்பு உணர்வு மேலோங்கியுள்ளது என்று பேரணியில் உரையாற்றிய தலைவர்கள் குறிப்பிட்டனர்.
 
இது குறித்து இறந்த பெண்ணின் தந்தை கூறுகையில், ”எனது மகள் எதற்காக, என்ன காரணத்திற்காக இறந்தாள். இனியும் இது போன்ற குற்றங்கள் நடைபெறக்கூடாது. அனைத்து அமெரிக்க முகாங்களும் வெளியேற வேண்டும். ஒகினாவா மாகாணத்தில் அனைவரும் ஒன்றிணைந்தால் இது நிச்சயம் சாத்தியமாகும் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.