ராஜபக்சேவிடம் நாட்டைக் கொடுத்தால் அழிவு நிச்சயம் - இலங்கை அமைச்சர் சம்பிக்க ரணவக்க
மகிந்த ராஜபக்சேவின் கைகளில் நாட்டைக் கொடுத்தால் அழிவு நிச்சயம் என்று இலங்கை அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் ஏற்பட்டிருக்கும் பிரதமர் வேட்பாளருக்கான போட்டி குறித்து கருத்து தெரிவிக்கையில் அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ”கடந்த பத்து ஆண்டுகளாக இந்த நாடு பல சவால்களுக்கு முகம் கொடுத்துள்ளது. சர்வாதிகார ஆட்சியாளர்களின் கடும்போக்கு அரசியலுக்கும் நாடு முகம் கொடுத்தது. வெறுமனே யுத்தத்தை வெற்றிகொண்டு நாட்டை ஆயுத போராட்டத்தில் விடுவித்ததாக கூறிக்கொண்டு மக்களை ஏமாற்றிய மகிந்த கூட்டணி நாட்டை அழிவின் பாதையில் கொண்டு சென்றுவிட்டது.
யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்பதில் நாமும் ஆவலோடு இருந்தோம். நாம் கொடுத்த அழுத்தத்தின் காரணத்தினால் தான் அரசாங்கம் தொடர்ந்து யுத்தத்தை முன்னெடுத்தது.
யுத்தம் முடிவடைந்தவுடன் நாட்டை மாற்றுப் பாதையில் கொண்டு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருந்தும் முன்னைய அரசாங்கத்தின் முக்கிய உறுப்பினர்கள் தமது அதிகார ஆசையில் சர்வாதிகார ஆட்சியை கடுமையாக்கியமையும் நாட்டில் அதிகாரக் குவிப்பை மேற்கொண்டமையுமே நாம் மகிந்தாவின் அரசாங்கத்தில் இருந்து வெளியேற பிரதானமான காரணமாக அமைந்தது.
கடந்த ஜனவரி மாதம் இந்த நாட்டில் மிக முக்கிய மாற்றம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இதுவரை காலமும் சர்வாதிகாரமாக பயணித்த ஆட்சிப் பாதை கடந்த ஜனவரி மாதம் ஜனாதிபதித் தேர்தலுடன் ஜனநாயகத்தின் பாதையில் பயணிக்க ஆரம்பித்துள்ளது. இந்த ஆட்சியில் நாடு சரியான பாதையில் பயணிக்க ஆரம்பித்துள்ளது” என்றார்.
இது தவிர, ராஜபக்சேவை மீண்டும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதமர் வேட்பாளராக களமிறங்குவது சாத்தியமானதா என்று கேள்வி எழுப்பப்பட்டபோது, ”ராஜபக்சேவை மீண்டும் பிரதமராக்க ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி முயற்சிக்க நினைப்பது மிகவும் முட்டாள் தனமானதொரு செயற்பாடாகும்.
மீண்டும் மகிந்த ராஜபக்சே கூட்டணியிடம் நாட்டை ஒப்படைத்தால் நாடு அழிவது உறுதி. அதேபோல் ராஜபக்சேவால் இனிமேல் அரசியலில் கால்தடம் பதிக்க முடியாது. அவரால் மீண்டும் மக்களின் ஆதரவை பெறமுடியாது” என்றார்.