1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 21 பிப்ரவரி 2022 (16:35 IST)

2 ஆண்டுகளுக்கு பிறகு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கும் நாடு!

ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. 

 
கொரோனா நோய் கட்டுப்பாட்டால் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் வெளிநாட்டினர் தங்களுடைய நாட்டிற்குள் வருவதற்கு ஆஸ்திரேலிய அரசு கட்டுப்பாடு விதித்தது. அந்த கட்டுப்பாடுகள் தற்போது விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலியா, நாட்டிற்குள் வெளிநாட்டவர் வருவதற்கான அனுமதியை அந்நாட்டு அரசு அளித்துள்ளது.
 
இதையடுத்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகர விமான நிலையத்தில், நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் ஒருவரை ஒருவர் சந்தித்து வருகின்றனர். இது தொடர்பாக ஆஸ்திரேலியா வெளியிட்டுள்ள தகவலின்படி, கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டு வருபவர்களுக்கு, எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லை என்றும் தடுப்பூசி செலுத்தாத சுற்றுலா பயணிகள் 14 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அதற்கான செலவை அவர்களே ஏற்றுக் கொள்ள வேண்டும்.
 
மேலும் மேற்கு ஆஸ்திரேலியாவுக்கு செல்வதற்கான தடை மார்ச் 3 வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. அதன் பிறகு அங்கு செல்ல விரும்புவோர் மூன்று டோஸ் தடுப்பு ஊசி போட்டிருந்தால் மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்றும் ஆஸ்திரேலிய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
ஆஸ்திரேலியாவில் உள்ள உலக பாரம்பரியம் மிக்க நீல மலைகளில் உள்ள லியூரா என்ற சுற்றுலா தலத்தில் மக்கள் இதனால் மீண்டும் கூடவும் அதனால் சுற்றுலா துறை வளர்ச்சி அடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.