1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By J.Durai
Last Modified: சனி, 25 மே 2024 (19:07 IST)

வியட்நாமில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ; 14 பேர் உடல் கருகி சாவு!

ஹனோய், வியட்நாம் தலைநகர் ஹனோயில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. 
 
அங்கு சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்தநிலையில் அங்குள்ள ஒரு வீட்டில் திடீரென தீப்பிடித்தது. 
 
பின்னர் மளமளவென அருகில் இருந்த மற்ற வீடுகளுக்கும் தீ வேகமாக பரவியது. இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சி அளித்தது.
 
இதனையடுத்து தீயணைப்புத் துறைக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்க முயன்றனர். அவர்களது பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. மற்றொருபுறம் அந்த குடியிருப்பில் சிக்கியவர்களை மீட்கும் பணியும் துரிதமாக நடைபெற்றது.
 
எனினும் தீ விபத்தில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்பட 14 பேர் உடல் கருகி பலியாகினர். மேலும் பலருக்கு படுகாயம் ஏற்பட்டது.
 
மீட்பு படையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.