1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. ‌விநாயக‌ர் சது‌ர்‌த்‌தி
Written By

பிள்ளையார் சுழி உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...?

சுழியை வளைவு “வக்ரம்” என்றும் சொல்வர். பிள்ளையாரின் தும்பிக்கை நுனியைப் பார்த்தால், வளைந்து சுருண்டிருக்கும். இதனால் அவரை “வக்ரதுண்டர்” என்றும் அழைப்பதுண்டு.
“திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் உருவாக்கும்
ஆதலால் வானோரும் யானை முகத்தானை
காதலால் கூப்புவர்தம் கை”
 
வாக்கு வளம், செல்வம் , தொழிலில் மேன்மை, பெருமை, உருவப்பொலிவு இவையாவும் ஆனைமுகத்தானை வணங்குபவருக்கு கிடைக்கும்ன்னு சொல்வாங்க. இப்படி எதை செய்தாலும் ஆனைமுகத்தானை வணங்கி செய்வது நம் வழக்கம். அந்த பழக்கம் செயலில்  மட்டுமில்லை. எழுதுவதிலும் உண்டு. எதை எழுதினாலும் பிள்ளையார் சுழி போட்டு எழுதுவது வழக்கம்.
பிள்ளையார் சுழியை “உ” என எழுதும்போது, முதலில் ஒரு சிறு வட்டத்தில் துவங்குகிறது. வட்டத்திற்கு முடிவே கிடையாது. விநாயகரும்  அப்படித்தான். அவரை அறிந்து கொள்வது என்பது பிரம்மபிரயத்தனம். வட்டம் என்பது இந்த பிரபஞ்சத்தை குறிக்கிறது. இதற்குள் பலவித உலகங்களும், வான் மண்டலமும் அடங்கியுள்ளது. அதாவது, விநாயகப் பெருமானுக்குள் சர்வலோகமும் அடக்கம். அவரது பெருவயிறும் அதையேதான் காட்டுகிறது. அந்த வயிற்றுக்குள் அவர் சர்வலோகத்தையும் அடக்கியுள்ளார் என்பது நம்பிக்கை.
 
“உ” எனும் வட்டத்திற்குப் பிறகு ஒரு நேர்கோடு நீள்கிறது. இதை சமஸ்கிருதத்தில், “ஆர்ஜவம்” என சொல்வர். இதற்கு “நேர்மை” எனப்பொருள். வளைந்தும் கொடு, அதேச்சமயம் நேர்மையை எக்காரணம் கொண்டும் விட்டுவிடாதே என்பதே இந்த பிள்ளையார் சுழியின் தத்துவம்.
 
இவ்வுலகில் வாழும் அனைத்து உயிர்களும் பிள்ளையார் சுழியிலிருக்கும் நேர்க்கோட்டைப்போல நேர்மையை கடைப்பிடிக்கனும்ன்னு இச்சுழி உணர்த்துவது.  அதேப்போல, வியாபாரத்தில் “உ” பிள்ளையார் சுழி போட்டு அதன்மேல் லாபம்ன்னு எழுதுவாங்க.  இவ்வியாபாரத்தில் கிடைக்கும் லாபம் நேர்வழியிலானதாக இருக்கட்டுமென்பதே இதன் பொருள். முதன்முதலில் எழுத்துவடிவத்தை கொண்டுவந்தவர் பிள்ளையார்.  எழுத்துவடிவில் தோன்றிய முதல்நூல் வியாச பாரதம்.