1. செய்திகள்
  2. செய்திகள்
  3. சட்டசபை தேர்தல் 2016
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 16 மே 2016 (15:09 IST)

மணப்பாறை தொகுதியில் கலவரம் ஏற்பட்டதால் ஓட்டுப்பதிவு திடீர் நிறுத்தம்

மணப்பாறை தொகுதியில் திமுக - அதிமுக அகிய இரு கட்சியினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் ஓட்டுப்பதிவு நிறுத்தப்பட்டது.


 

 

 
திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மருங்காபுரி ஒன்றியம் மினிக்கியூர் 205–வது வாக்குச்சாவடியில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. பொதுமக்கள் அனைவரும் தங்களது வாக்குகளை பதிவு செய்ய தொடங்கினர். 
 
இந்நிலையில் வாக்கு சதவீதத்தை அறிவதற்காக தேர்தல் அதிகாரிகள் பதிவான வாக்குகளை சரிபார்த்தனர்.
அப்போது பதிவாகிய 77 வாக்குகளுக்கு பதில் மின்னணு எந்திரத்தில் 88 வாக்குகள் பதிவாகியதாக காட்டியது. 
 
இதனால் தி.மு.க.– அ.தி.மு.க. கட்சியினர் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து தி.மு.க.வினர் மாற்று எந்திரம் கொண்டு வந்து தேர்தலை நடத்த வேண்டும் என்றனர். இதற்கு அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
 
இதைத்தொடர்ந்து அங்கு வாக்குப்பதிவு திடீரென நிறுத்தப்பட்டது. சம்பவ இடத்திற்கு தேர்தல் உயர் அதிகாரிகள் சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். மேலும் வாக்குப்பதிவை தொடங்குவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர்.