வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. சட்டசபை தேர்தல் 2016
Written By Murugan
Last Modified: வியாழன், 5 மே 2016 (10:22 IST)

குடும்பத்துக்கு ஒரு லட்சம் மதிப்பிலான இலவச பொருட்கள்? : அறிவிப்பை வெளியிடுகிறாரா ஜெயலலிதா?

ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு லட்சம் மதிப்புடைய இலவச பொருட்களை கொடுப்பார் அம்மா என்று அதிமுக தேர்தல் பிரச்சாரப் பேச்சாளர் நிர்மலா பெரியசாமி கூறியுள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுவிட்ட நிலையில், ஆளும் கட்சியான அதிமுக இன்னும் தேர்தல் அறிக்கையை வெளியிடவில்லை. 
 
ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிடும் தமிழக முதல்வர், நாளை மக்கள் முன்னிலையில் அதிமுகவின் தேர்தல் அறிக்கையை வெளியிடுவார் என்ற செய்தி வெளியாகியிருக்கிறது.
 
அதிமுகவின் சார்பில் என்னென்ன இலவசங்கள் மற்றும் திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.  திமுகவின் தேர்தல் அறிக்கை நல்ல வரவேற்பை பெற்றிருப்பதால், அதிமுக தன்னுடைய தேர்தல் அறிக்கையில் சில மாற்றங்கள் செய்திருப்பதாகவும், மேலும் மழையால் பாதிக்கப்பட்ட மற்றும் சில தொகுதிகளுக்கு என தனியான தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
 
இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நிர்மலா பெரியசாமி பிரச்சாரம் மேற்கொண்ட போது குடும்பத்துக்கு ஒரு லட்சம் மதிப்பிலான இலவசங்ளை அம்மா கொடுப்பார் என்று பீதியை கிளப்பினார்.


 

 
அவர் கூறும்போது “வீட்டிற்கு தேவையான மின்விசிறி, மிக்சி, கிரைண்டர் ஆகியவற்றை அம்மா ஏற்கனவே கொடுத்து விட்டார். மிச்சமிருக்கிற வாஷிங் மெஷின், ஃப்ரிட்ஜ் ஆகியவற்றையும் அம்மா கொடுப்பார். விரைவில் வெளியிட இருக்கிற அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் குடும்பத்துக்கு ஒரு லட்சம் மதிப்பிலான இலவசங்கள் அறிவிக்கப்படலாம்” என்று கூறினார்.
 
அதிமுகவின் தேர்தல் அறிக்கை பற்றி நிர்மலா பெரியசாமி கூறியுள்ள இந்த தகவல் பொதுமக்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.