வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By திருமலை சோமு
Last Modified: வெள்ளி, 20 நவம்பர் 2020 (21:30 IST)

வளர்ச்சிக் கதைகளைச் சொல்லும் புரிந்துணர்வு சீனா 2020 மாநாடு!

புரிந்துணர்வு சீனா 2020 மாநாடு சீனாவின் குவாங்ச்சோ மாநகரில் இன்று தொடங்கியது. சீனாவில் என்ன நடக்கிறது என்பதையும், அதன் வளர்ச்சிப் போக்கு மற்றும் செழிப்பை உலகம் அறிந்து கொள்ள வேண்டும் எனவும், சர்வதேச நாடுகள் சீனாவை புரிந்து கொண்டு ஒத்துழைப்பை வளர்க்க வேண்டும் எனவும் கடந்த 2013ம் ஆண்டில் இருந்து புரிந்துணர்வு சீனா மாநாடு நடத்தப்படுகிறது.

முதலில் பெய்ஜிங்கில் நடைபெற்று வந்த இந்த மாநாடு கடந்த ஆண்டு முதல் குவாங்சோ மாநகரில் நடைபெறுகிறது. இவ்வாண்டு மாநாடு நேற்று வெள்ளிக்கிழமை தொடங்கியது. 

இம்மாநாட்டில் 60க்கும் மேற்பட்ட சர்வதேச விருந்தினர்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக மெக்ஸிகோ முன்னாள் அதிபர் எர்னஸ்டோ செடிலோ, இந்தோனேசியாவின் முன்னாள் அரசுத் தலைவர் மெகாவதி அம்மையார், பிரிட்டன் முன்னாள் பிரதமர் கோர்டன் பிரவுன் மற்றும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைமை இயக்குநர் விளாடிமிர் நோரோவ் ஆகியோரும் காணொலி மூலம் சிறப்புரையாற்றி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

உலக உணவு கண்காட்சி, கலை நிகழ்ச்சிகள், ஆளில்லா வான்வழி வாகனம் (யுஏவி) நிகழ்ச்சிகள், அத்துடன் ஒரு நல்ல சமுதாயத்தை கட்டியெழுப்புதல் மற்றும் வறுமை ஒழிப்பு முயற்சிகள் போன்ற கருப்பொருளைக் கொண்ட கண்காட்சிகள் இம்மாநாட்டில் நடத்தப்படுகின்றன .

கரோனா பெருந்தொற்று பரவலுக்கு இடையில் சீனா தங்கள் நாட்டின் இயல்பான வளர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பில் மிகுந்த கவனம் செலுத்தி வருவதோடு, சர்வதேச நாடுகளுடனும் இணக்கமான சூழலை கடைபிடிக்க முனைப்பு காட்டி வருகிறது. மேலும் வலிமை குன்றிய நாடுகளுக்கு பெருந்தொறில் இருந்து மீள தேவையான உதவிகளையும் செய்து வருகிறது.

பொருளாதார மீட்புக்கான முக்கிய திட்டங்களை கருத்தில் கொள்வது மட்டுமல்லாமல், சீனா எவ்வாறு மாறுகிறது? சீனாவின் பார்வை என்ன, அது எவ்வாறு பகிரப்பட்ட உலகளாவிய பார்வைக்கு ஒத்துழைக்க விரும்புகிறது என்பதையும் சீனப் பொருளாதாரத்தின் புதிய உந்து சக்திகள், சீனா எதிர்கொள்ளும் நிதி சவால்கள் மற்றும் சீனாவில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு உள்ள வாய்ப்புகள் போன்றவற்றையும்  மூன்று நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டின் கருத்தரங்கங்கள் மூலம் சீனா உலகுக்கு எடுத்துரைக்கிறது.

நகர்ப்புற புதுப்பித்தல் மற்றும் ஆளுமை, பொருளாதார உலகமயமாக்கல், தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு, நிர்வாக அமைப்பின் சீர்திருத்தம், பரந்து விரிந்த கலாச்சாரம் மற்றும் சுகாதாரக் கல்வி போன்ற தலைப்புகளில் விவாதிக்கப்படுகின்றன.

பொதுவாக சர்வதேச மாநாடுகள், கருத்தரங்கள் நடத்தப்படும் போது அது உலகளாவிய பார்வையை விரிவுப்படுத்துவதோடு, உள்நாட்டில் அந்நகரின் வளர்ச்சியும் மேம்படும் என்பதில் ஐயமில்லை. அந்த வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளில், குவாங்சோ தனது பழைய நகர்ப்புறங்களை புதுப்பித்துக் கொள்ளவும், நகர்ப்புற செயல்பாடுகளை வலுப்படுத்தவும், நகர கலாச்சாரத்தை வளப்படுத்தவும், நவீன சேவைத் துறையை வளர்த்துக் கொள்ளவும், வணிகச் சூழலை மேம்படுத்தவும் பெரும் முயற்சிகளை மேற்கொண்டது. இதற்காக பெருமளவில் முதலீடு செய்யப்பட்டது.

குவாங்சோ நகரத்தின் அபிவிருத்தி மற்றும் சீர்திருத்த ஆணையம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையின்படி, 2019ஆம் ஆண்டில், நகரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2.36 டிரில்லியன் யுவான் (360 பில்லியன் டாலர்) ஐ எட்டியது, இது ஆண்டுக்கு 6.8 சதவீதம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குவாங்சோவில் தற்போது போக்குவரத்து, தகவல் பரிமாற்றம் மற்றும் கலாச்சார தொடர்பு ஆகியவற்றின் செயல்பாடுகள் பெருமளவில் மேம்பட்டுள்ளது. குவாங்சோ பயூன் சர்வதேச விமான நிலையத்தின் மூன்றாம் கட்ட திட்டம் கட்டுமானத்தில் உள்ளது. 120 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் வந்து செல்ல முடியும் என்று கணிக்கப்பட்டுள்ளது.