1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 10 மே 2024 (12:23 IST)

பிரபாஸ் ஓகே சொன்னா ‘பாகுபலி 3’ பண்ண நான் ரெடி! – ராஜமௌலி கொடுத்த அசத்தல் அப்டேட்!

பிரபாஸ் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த பாகுபலி திரைப்படத்தின் 3வது பாகத்தை விரைவில் இயக்க உள்ளதாக ராஜமௌலி தெரிவித்துள்ளார்.



தெலுங்கு இயக்குனரான எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கி 2015ல் வெளியாகி பெரும் ஹிட் அடித்த படம் பாகுபலி பாகம் 1. அதை தொடர்ந்து 2017ம் ஆண்டு வெளியான பாகுபலியின் 2வது பாகம் உலகம் முழுவதும் பெரும் ஹிட் அடித்து முதல் முறையாக 1000 கோடி ரூபாய் வசூல் செய்து வரலாற்று சாதனை படைத்தது.

ஆனால் பாகுபலிக்கு பிறகு பிரபாஸ் நடித்த சாஹோ, ராதே ஷ்யாம் உள்ளிட்ட படங்கள் அவருக்கு வெற்றியை தரவில்லை. சமீபத்தில் வெளியான சலார் படம் வெற்றிதான் என்றாலும் எதிர்பார்த்த வசூலை தரவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் பிரபாஸ் நடித்து விரைவில் வெளியாக உள்ள கல்கி 2898 ஏடி வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

அதையடுத்து நீண்ட ஆண்டுகள் கழித்து மீண்டும் பிரபாஸும், ராஜமௌலியும் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பெரும் ஹிட் அடித்த பாகுபலி படத்தின் 3வது பாகத்தை ராஜமௌலி இயக்க உள்ளதாக ரசிகர்களிடையே பேச்சு பரவியது.

இதுகுறித்து சமீபத்தில் ஒரு நேர்க்காணலில் பேசிய நடிகர் பிரபாஸ் “பாகுபலி 3ம் பாகம் எடுப்பது என் கையில் இல்லை. அது ராஜமௌலி கையில்தான் உள்ளது. பாகுபலி என் இதயத்துக்கு நெருக்கமான படம்” என தெரிவித்திருந்தார்.

பாகுபலி 3ம் பாகம் எடுக்கப்படுமா என்ற யூகங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய இயக்குனர் ராஜமௌலி “பாகுபலி படத்தின் 3ம் பாகம் வருமா என்று பலரும் தொடர்ந்து கேட்கிறார்கள். பாகுபலி 3 கண்டிப்பாக உருவாகும். அதற்காக பிரபாஸிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது” என கூறியுள்ளார்.

Edit by Prasanth.K