1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 31 ஜனவரி 2023 (09:02 IST)

சினிமாவை விட்டே போய்விடலாம் என நினைத்தேன்… பதான் வெற்றிக்குப் பிறகு ஷாருக் உருக்கம்!

ஷாருக் கானின் பதான் திரைப்படம் 500 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இதையடுத்து சக்ஸஸ் பார்ட்டி நடந்த நிலையில் அதில் ஷாருக் கான் கலந்துகொண்டார்.

ஷாரூக்கான், தீபிகா படுகோன் நடிப்பில் சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ள படம் பதான். இந்த படத்தின் பாடல் ஒன்றில் தீபிகா படுகோன் காவி நிற கவர்ச்சி ஆடை அணிந்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து பல மாநிலங்களில் இந்த படத்தை வெளியிட எதிர்ப்பு தெரிவித்து பலரும் போராட்டம் நடத்தினர். ஆனால் படம் தேசபக்தி பற்றிய படம் என்பதால் ரிலீஸூக்கு பிறகு எதிர்ப்புக்குரல்கள் அடங்கியுள்ளன.

இந்நிலையில் ரிலீஸாகி 5 நாட்களில் மட்டும் 500 கோடி ரூபாய் வசூலித்து சாதனைப் படைத்துள்ளது. இதையடுத்து நடந்த படத்தின் சக்ஸஸ் மீட் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஷாருக் கான் பதான் தனக்கு சினிமாவில் மீண்டும் வாழ்க்கையை அமைத்துக் கொடுத்துள்ளதாகக் கூறியுள்ளார்.

மேலும் அவர் “கடந்த சில வருடங்களாக நான் எந்த படத்திலும் நடிக்கவில்லை. அதற்கு முன்னர் ரிலீஸான சில படங்களின் தோல்வியால் சினிமாவை விட்டே விலகி வேறு தொழிலுக்கே சென்றுவிடலாமா என நினைத்தேன். ஹோட்டல் பிஸ்னஸில் இறங்க சமையல் எல்லாம் கத்துக்கொண்டேன். பதான் மீண்டும் எனக்கான வாழ்க்கையை கொடுத்துள்ளது.” எனக் கூறியுள்ளார்.