வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Updated : சனி, 10 ஜனவரி 2015 (11:14 IST)

லிங்கா நஷ்டஈடு கேட்டு விநியோகஸ்தர்கள் போராட்டம் - ரஜினிக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்ட நடிகர் சங்கம்

லிங்கா பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்திவிட்டது. ரஜினி தலையிட்டு நஷ்டஈடு வாங்கித்தர வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட ஆரம்பித்துள்ளனர் சில விநியோகஸ்தர்கள். 
 
இந்த விவகாரத்தில் ரஜினிக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளது நடிகர் சங்கம்.
 
தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், பொதுச்செயலாளர் ராதாரவி, பொருளாளர் வாகை சந்திரசேகர் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு்- 
 
லிங்கா பட வசூல் குறைவாக உள்ளதாக தெரிவித்து, அதனால் ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஈடு செய்திட ரஜினிகாந்த் அவர்கள் தலையிட வேண்டும் என்று திரைப்பட விநியோகஸ்தர்கள் கோரிக்கை எழுப்பி வருகிறார்கள். ஒரு திரைப்படம் வெற்றி பெறுவதும், வசூலில் குறைவு ஏற்படுவதும் ரசிகர்கள் கையில்தான் இருக்கிறது. 
 
ஆனால், அதற்கு முன்பாக அந்தத் திரைப்படம் யூகத்தின் அடிப்படையில் தான் விலைபேசி முடிக்கப்பட்டு திரையிடப்படுகிறது. எந்த ஒரு தொழிலிலும் லாப நஷ்டம் இரண்டும் உண்டு. 
 

 
அதுபோன்று தான் ‘லிங்கா’ திரைப்படம் மூலம் அதிக வசூல் கிடைக்கும் என்று எதிர்பார்த்து செய்த வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது என்று சொன்னால், அதை அந்த படத்தின கதாநாயக நடிகரிடம் கேட்பதைவிட தயாரிப்பாளரிடம் அணுகி தங்கள் கோரிக்கையை சொல்லலாம். 
 
ஏன் என்றால், தங்கள் படத்தில் இவ்வளவு இழப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்து தாங்கள் எடுக்கும் படத்தின் விநியோகத்தை சலுகை செய்து எங்கள் இழப்பை ஈடுகட்டவேண்டும் என்று வணிக ரீதியாக அணுகலாம். தவறில்லை. 
 
அதேசமயம், கதாநாயக நடிகரிடம் கேட்பதில் நியாயம் இருக்க முடியாது. ஒவ்வொரு நடிகர் படமும் ஏற்ற இறக்கத்தோடுதான் வசூல் செய்கிறது. லாபம் கிடைக்கும்போது சந்தோஷப்பட்டு, வருவாய் இழப்பு ஏற்படுகிறபோது மட்டும் நடிகர் தலையிட்டு சரிசெய்ய வேண்டும் என்றால் எந்த ஒரு நடிகரும் அதை பின்பற்ற முடியாது. 
 
எனவே, திரைப்பட விநியோகஸ்தர்கள் லிங்கா தயாரிப்பாளரை அணுகி தங்கள் குறைகளை முறையிட வேண்டுமே தவிர, தன் உழைப்பை தந்து படத்தை முடித்துக் கொடுத்துவிட்ட நடிகரை அணுகி நஷ்டத்தைப் பற்றி விவாதிப்பது தவறான முன் உதாரணமாக ஆகிவிடும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.