சனி, 28 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 3 மே 2022 (07:16 IST)

பெப்சி தொழிலாளர்கள் இனி வேண்டாம்: தயாரிப்பாளர் சங்கத்தின் அதிரடி அறிக்கை!

பெப்சி தொழிலாளர்கள் இனி வேண்டாம்: தயாரிப்பாளர் சங்கத்தின் அதிரடி அறிக்கை!
இனி பெப்சி தொழிலாளர்கள் இல்லாமலேயே படப்பிடிப்பை நடத்திக் கொள்ளலாம் என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்திருப்பது திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
 தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர், செயலாளர்கள், துணை தலைவர்கள், பொருளாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்ட செயற்குழு கூட்டம் மே இரண்டாம் தேதி நடைபெற்றது. 
 
அதில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஆகிய இரு தரப்பினருக்கும் மட்டுமே காலங்காலமாக புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆனது இருந்து வருகின்றது. 
 
அந்த வகையில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கடந்த மார்ச் மாதம் ஒன்பதாம் தேதி இருவரும் கையெழுத்திட்டனர். மேற்படி புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை அவமதிக்கும் வகையில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் செயல்பட்டதால், இரு அமைப்பிற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று அதாவது மே 2 முதல் ரத்து செய்யப்படுகிறது என்று செயற்குழு கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது .
 
மேற்படி தீர்மானத்தின் அடிப்படையில் மே 3 ஆம் தேதி முதல் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் தங்களுக்கு தேவையான வேலையாட்களை யாரை வேண்டுமானாலும் வைத்து படப்பிடிப்பு பணிகளை மேற்கொள்ளலாம் என்று அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.