1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 16 ஜனவரி 2019 (10:02 IST)

மீண்டும் ஹவுஸ்புல்லாகும் பேட்ட விஸ்வாசம் – பொங்கல் கொண்டாட்டம் ஆரம்பம்…

பொங்கலை முன்னிட்டு பேட்ட மற்றும் விஸ்வாசம் படங்கள் ஜனவரி 10 ஆம் தேதி ரிலிஸாகின. இரு படங்களும் மக்களிடம் வரவேற்பைப் பெற்று வருகின்றன.

பேட்ட, விஸ்வாசம் என இரண்டுப் படங்களும் அந்தந்த நடிகர்களின் ரசிகர்களையே இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதால் பேட்ட ரஜினி ரசிகர்களுக்கும் விஸ்வாசம் அஜித் ரசிகர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியையும் பொதுவான சினிமா ரசிகர்களுக்கு கலவையான உணர்வையும் அளித்துள்ளன. பேட்ட படம் ரஜினியின் இளமை துள்ளலான ரஜினிக்காவும், விஸ்வாசம் படம் குடும்ப செண்ட்டிமெண்ட்காகவும் ரசிகர்களைக் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கிராமங்களில் விஸ்வாசமும் நகரங்களில் பேட்ட படமும் நல்ல வசூலை ஈட்டி வருகின்றன.

ஜனவரி 10 ஆம் தேதி ரிலிஸான இந்த இருப்படங்களும் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் ஹவுஸ்புல்லாக ஓடின. அதன் பின்னர் மக்கள் பொங்கல் பண்டிகைக்காக ஊருக்கு செல்லுதல் மற்றும் பொங்கல் ஏற்பாடுகள் காரணமாக சென்னை தவிர்த்த பிற புறநகர்ப் பகுதிகளிலும் கிராமங்களிலும் கூட்டம் பாதியாகக் குறைய ஆரம்பித்தது. அதையடுத்து நேற்று பொங்கல் பண்டிகை முடிந்துள்ளதையடுத்து மக்கள் மீண்டும் திரையரங்குக்கு வர ஆரம்பித்துள்ளனர்.

நேற்று முதல் மீண்டும் அரங்குகள் நிறைய ஆரம்பித்துள்ளன. பொங்கல் விடுமுறைகள் முடிய இன்னும் 5 நாட்கள் இருப்பதால் அதுவரையில் மீண்டும் கூட்டம் நிரம்பி வழியும் என எதிர்பார்க்கப்படுகிறது.