வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : வியாழன், 12 டிசம்பர் 2019 (13:54 IST)

பூஜையுடன் தொடங்கியது "பேப்பர் பாய்" படப்பிடிப்பு!

சுவாதிஷ் பிக்சர்ஸ் வழங்கும் "பேப்பர் பாய்" படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னை வளசரவாக்கத்தில் பூஜையுடன் தொடங்கியது. இயக்குனர் எஸ்ஆர் பிரபாகரன் அவர்கள் கிளாப் அடித்து படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
 
சுவாதிஷ் பிக்சர்ஸ் சார்பாக PSJ பழனிராஜன்  தயாரிக்கும் இப்படத்தை, இயக்குனர்  விஜய் மில்டனிடம் கடுகு, கோலிசோடா 2 போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய "ஸ்ரீதர் கோவிந்தராஜ்" இயக்குகிறார். இப்படத்திற்கு கோலி சோடா , சண்டி வீரன் போன்ற படங்களுக்கு இசையமைத்த அருணகிரி இசையமைக்கிறார். ஒளிப்பதிவு ஜெகதீஷ் V விஸ்வா , படத்தொகுப்பு எல்.வி.கே தாஸ், நடனம்- சாண்டி மாஸ்டர்
 
இப்படத்தை பற்றி இயக்குனர் கூறுகையில்....
 
இப்படம் தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற "பேப்பர் பாய்" படத்தின் ரீமேக் ஆகும்.  தமிழுக்கு தகுந்தார்போல் அதில் சிறு சிறு மாற்றங்களை உருவாக்கி உள்ளோம். அன்றாடம் பேப்பர் போட்டு வாழ்க்கை நடத்தும் இளைஞனுக்கும் கோடீஸ்வர நாயகிக்கும்  உருவாகும் காதல், அதனால் அவர்கள் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள் தான் இப்படத்தின் கதை.
 
இது முழுவதுமாக எதார்த்தங்கள் நிறைந்த கதையாக இருக்கும். காதல் காட்சிகள் நிறைந்த படம் என்பதால் இதில் இசைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளோம். தமிழில் காதல் கோட்டை, காதலுக்கு மரியாதை இவ்வரிசையில் ஒரு எதார்த்த காதல் கதையை நீங்கள் 2020 இல் காணலாம்.
 
இதில் நாயகனாக சுவாதிஷ் ராஜா, நாயகியாக யாமினி பாஸ்கர், முக்கிய கதாபத்திரத்தில் வடிவுக்கரசி, தலைவாசல் விஜய், சுஜாதா, கடலோரக் கவிதைகள் ரேகா, ராட்சசன் பட வில்லன் சரவணன், எம்ஜிஆரின் பேரன் ராமச்சந்திரன், தாரை தப்பட்டை அக்ஷயா,  பாலா, அமுதவாணன்  ஆகியோர் நடிக்கிறார்கள். மேலும் பல முன்னணி நட்சத்திரங்களுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. இதன் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்குகிறது. சென்னை  கேரளா மற்றும் கர்நாடகாவில் தொடர்ந்து நடைபெற உள்ளது.