வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 28 நவம்பர் 2018 (17:14 IST)

"நில்லு நில்லு" - லொள்ளு செய்த இளைஞர்களை அள்ளிச்சென்ற போலீசார் - வைரல் வீடியோ

நம்மூரில்  சில மாதங்களுக்கு முன்பு வைரலான கிகி சேலஞ்ச் போல, தற்போது கேரளாவில் "நில்லு நில்லு" என்ற  சேலஞ்ச் வைரலாகிவருகிறது. வாகனத்தை வழிமறித்து லொள்ளு செய்யும் இளைஞர்களை அவர்கள் பணியிலே பாடம் புகட்டிய கேரள போலீசாரின் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் செம்ம வைரலாகி வருகிறது. 
தலையில் தலைக்கவசம் அணிந்துகொண்டு, கைகளில் காய்ந்த இலைகளையோ, குச்சிகளையோ வைத்துக்கொண்டு, சாலையில் செல்லும் வாகனங்களைத் திடீரென்று வழிமறித்து வண்டியின் முன்பு நடனமாடி அதை வீடியோவாகப் பதிவுசெய்து, சமூக ஊடகங்களான டிக் டாக், ஃபேஸ்புக் போன்றவற்றில் பதிவிட்டு லைக்ஸ்களையும், ஷேர்களையும் அள்ளுவதே கேரள குசும்புகளின் வேலை .
 
சேலஞ்ச்களுக்கு பஞ்சம் வைக்காமல்  அவ்வப்போது ஒவ்வொரு சேலஞ்சை கிளப்பிவிட்டு, அதனை வைரலாக்கி உலகறியச் செய்யும் உன்னதமான வேலைகளை பலரும் செய்து வருகின்றனர். 
அப்படி உயிரை பணய வைத்து மெகா வைரலாகிய சில சேலஞ்ச்களை சற்று திரும்பி பார்த்தோமானால், ஐஸ் பக்கெட் சேலஞ்ச், கீகீ சேலஞ்ச், புளுவேல் சேலஞ்ச் , மோமோ  சேலஞ்ச் என ஆபத்துக்கள் நிறைந்த  அத்தனையையும் பார்த்துவிட்டோம். இந்த நிலையில்தான் தற்போது கேரளாவில் டிக் டாக்  செயலி மூலம் அறிமுகமாகி வைரலாகத் தொடங்கியுள்ளது "நில்லு நில்லு" சேலஞ்ச். 
 
இதென்னடா சேலஞ்களுக்கு வந்த சோதனை என்று அலசி ஆராய்ந்து விசாரித்து பார்த்ததில், ஓடும் பேருந்தையோ அல்லது வாகனங்களை சாலையிலே நிறுத்தி, அவற்றின் முன் நடனமாடும் இந்த சேலஞ் கேரள இளைஞர்களின் உயிரை பணய வைத்துள்ளது. 
இதுவரை வந்த எந்த ஒரு சேலஞ்சிலும் இல்லாத ஒரு சுவாரஸ்யம் அப்படி என்ன இதில் இருக்கிறது. என்றால்? குரூப்பாக 5-க்கும் மேற்பட்டோர் ஒன்றுகூடி ஓடும் வண்டியின் முன் ஆட்டம் போடுவது தான் இதன் த்ரில்லாம் . 
 
திடீரென்று வாகனங்களை மறித்து கும்பலாக ஆட்டம் போடுவதால் எதிர்பாராத வாகன ஓட்டிகள் நிலைதடுமாறுகிறார்கள். ஆட்டம் ஆடுபவர்கள் மீது வாகனங்கள் மோதும் அபாயமும் நிலவுகிறது. இதில் சில வாலிபர்கள் உச்சகட்டமாக ரெயில் தண்டவாளத்தில் ரெயில் வரும்போது இந்த நடனத்தை அரங்கேற்றுகிறார்கள். ரெயில் அருகில் வந்ததும் தண்டவாளத்தில் இருந்து குதிக்கிறார்கள். இதுவும் வீடியோவாக பரவி வருகிறது.
 
"நில்லு நில்லு" எப்படி ஆரம்பித்தது என்றால், 2004-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'ரெயின் ரெயின் கம் எகெயன்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'நில்லு நில்லு என்ட நீலக் குயிலே' பாடல்தான் இதில் பயன்படுத்தப்படுகிறது. இப்பாடலில் இடம்பெறும் பெரும்பாலான காட்சிகள், நட்டநடு சாலைகளில் படமாக்கப்பட்டவை. 
 
அதை அடிப்படையாக வைத்துதான் தற்போது இந்தப் பாடல் வைரலாகியிருக்கிறது. நில்லு நில்லு சேலஞ் சற்று முற்றிப்போக சில இளைஞர்கள் போலீஸ் வாகனத்தையே  வழிமறித்து ஹெல்மெட்டுடன் ஆட்டம் போட்டுள்ளனர்.
இதனால், திருவனந்தபுரம் காவல் துறையினர் தங்களுடைய முகநூல் பக்கத்தில் " வாகனங்களை வழிமறிப்பவர்கள்குறித்து வாகன ஓட்டுநர்கள் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கலாம். பயணிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துபவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்"என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். இருந்தும் இதனை நிறுத்திய பாடில்லை என்பதால் நேரடியாக களத்தில் குதித்தனர் கேரள போலீசார். 
 
நில்லு நில்லுவிற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கேரளா போலீசார் பேருந்தின் முன் நின்று ஆட்டம் போட்டுக்கொண்டிருந்த கும்பலை ஆம்புலன்ஸில் அள்ளிக்கொண்டு சென்றனர். 
 
மேலும் இவ்வாறு ஆடினால் ஆம்புலன்ஸ் வந்து ஆடிக்கொண்டிருந்தவர்களை அள்ளிக்கொண்டு போக வேண்டி வரும் என்கிற கருத்தினை வெளிப்படுத்தும் வகையில் காவல்துறையினர் இதனை வீடியோவை உருவாக்கி வெளியிட்டுள்ளனர்.
 
தற்போது இந்த வீடியோவுக்கு அமோக வரவேற்பு கிடைத்ததோடு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.