1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 13 ஆகஸ்ட் 2021 (08:51 IST)

உன் போதைக்கு நான் ஊறுகாயா...? மீரா மிதுனை வெளுத்து வாங்கிய எம்.எஸ்.பாஸ்கர்!

நடிகை மீராமிதுன் அண்மையில் தமிழ் இயக்குநர்கள் சிலரை சாதிய ரீதியாக தாக்கி பேசிய வீடியோ பெரும் சர்ச்சைக்குள்ளாகியது.  அந்த சமூகத்தை சார்ந்த இயக்குநர்களை திரை துறையை விட்டு நீக்கவேண்டும் என்று அறுவருக்கத்தக்க வகையில் பேசியிருந்தார். இதற்கு பல தரப்பினர் கண்டனம் தெரிவிக்க அவரை கைது செய்யவேண்டும் என கூறி வருகின்றனர். 
 
இந்நிலையில் மீரா மிதுனின் பேச்சை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ள நடிகர் எம் எஸ் பாஸ்கர், என்னவாயிற்று இந்த பொண்ணுக்கு...? உன் போதைக்கு நான் ஊறுகாயா என்று காமெடியாகக் கேட்பார்கள். ஆனால், இவர் சமீபத்தில் பேசியிருப்பது காமெடியல்ல. வீணாக வம்புக்கு இழுக்கும் விஷமத்தனம். சாதிப் பெயரைச் சொல்லிப் பேசுவது மிகவும் கண்டனத்திற்குரியது.
 
சாதித்தவர்கள் பலர் அடக்கமாக இருக்கும்போது இவர் ஏன் இவ்வளவு ஆணவமாகப் பேசுகிறார். சாதனைக்கும், அறிவுக்கும், சாதிக்கும் சம்பந்தம் ஏது? என் தெய்வம் ‘கலைஞானி’ கமலஹாசன் ஏது? ஒரு படத்திலிருந்து ஒதுக்கித் தள்ளிவிட்டார் என்று இவர் கூறியிருப்பதைக் கேட்டு அழுவதா, சிரிப்பதா. ஈர்க்குச்சியை ஒதுக்கித்தள்ள யானை வேண்டுமா. என்ன மூடத்தனமான பேச்சு இது. விஜய், சூர்யா ஆகியோர் பண்பின் சிகரங்கள். அவர்களுக்கு அடுத்து இவரது வசைபாடலில் இன்று கலைஞானியா..?

குறிப்பிட்ட சாதியினரைத் திரை உலகை விட்டுத் துரத்த வேண்டும் என்று சொல்ல இவருக்கு என்ன உரிமை இருக்கிறது. இவரது பேச்சு மனத்தைப் புண்படுத்தும் விஷயம் மட்டுமல்ல. பேச்சு அகங்காரத்தின் உச்சம். மற்றவர்கள் மனத்தைப் புண்படுத்தி விளம்பரம் தேடுவது கயமைத்தனம். இத்தகைய பேட்டிகளை யூடியூப் சேனல்கள் புறக்கணித்தாலே இப்படிப்பட்ட வம்புக்காரர்களின் வாயை அடைத்து விடலாம். மிகுந்த மனவேதனையோடு வன்மையாக இவரைக் கண்டிக்கிறேன். இனியாவது இவர் நாவடக்கத்தோடு இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்” என காட்டமாக அறிவுரை கூறியுள்ளார்.