வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: சனி, 5 செப்டம்பர் 2020 (09:41 IST)

பேராசிரியராக ஆசைப்பட்டேன், ஆனால் பாடலாசிரியர் ஆகிவிட்டேன்: வைரமுத்து

ஒவ்வொரு ஆண்டும் முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருவது வழக்கம். அந்த வகையில் இன்று ஆசிரியர் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது 
 
தங்களுக்கு பாடம் சொல்லிக்கொடுத்த குருவான ஆசிரியர்களுக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். பிரதமர், முதல்வர் முதல் திரையுலகை சேர்ந்தவர்கள் மற்றும் தொழிலதிபர்கள் வரை அனைவரும் ஆசிரியர் தின வாழ்த்துக்களை தங்களது சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
அந்த வகையில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் தனது டுவிட்டரில் ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்து விட்டு ’பேராசிரியராக ஆசைப்பட்டேன், ஆனால் காலம் என்னை பாடலாசிரியராக மாற்றிவிட்டது’ என்று கூறியுள்ளார்
 
அவர் இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
 
கல்லூரிப் பேராசிரியர்கள் 
எனக்கு உரமிட்டவர்கள்;
பள்ளி ஆசிரியர்களே நட்டவர்கள்.
 
காலச்சக்கரம் பின்னோக்கிச் சுழன்றால்
பள்ளி நாட்களுக்கே பயணப்படுவேன்.
 
அவர்களைப் பார்த்துப்
பேராசிரியனாகவே ஆசைப்பட்டேன்; 
காலம் என்னைப் பாடலாசிரியனாக்கிற்று.
 
ஆசிரியர் குலத்திற்கு
என் கனிந்த கைகூப்பு.