ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 12 மே 2021 (10:50 IST)

இருக்க பிரச்சினைல அப்டேட் கேட்டு தொல்லை பண்ணாதீங்க! – டாக்டர் தயாரிப்பாளர் அறிவிப்பு!

சிவகார்த்திகேயன் நடித்து வெளியாகவுள்ள டாக்டர் படத்திற்கான அப்டேட் கேட்பது குறித்து தயாரிப்பு நிறுவனமான கேஜேஆர் ஸ்டுடியோஸ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து ரிலீஸுக்கு தயாராக உள்ள படம் “டாக்டர்”. ப்ரியங்கா மோகன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில் கேஜேஆர் ஸ்டுடியோஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. படத்தயாரிப்பு பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில் கொரோனா காரணமாக படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாகவும் பேசிக் கொள்ளப்பட்டது.

இந்நிலையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள கேஜேஆர் ஸ்டுடியோஸ் “தினமும் டாக்டர் பட அப்டேட் கேட்டு பலரும் எங்களை தொடர்பு கொள்கிறீர்கள். முழு படமும் முடித்து கையில் உள்ள நிலையில் கொரோனா காரணமாக அதை வெளியிட முடியாமலும், பல பொருளாதார பிரச்சினைகளிலும் உள்ளோம். மறுபக்கம் எங்கள் அன்பானவர்களையும் கொரோனாவால் இழந்து வருகிறோம். இந்த நிலையில் டாக்டர் அப்டேட் வெளியிடவோ, கொண்டாடவோ கூடிய மனநிலையில் இல்லை என்பதை வருத்தங்களுடன் தெரிவித்துக் கொள்கிறோம். கொரோனா விதிமுறைகளை பின்பற்றி வீட்டில் பாதுகாப்பாக இருங்கள்” என்று தெரிவித்துள்ளது.