வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Updated : வெள்ளி, 7 ஆகஸ்ட் 2015 (12:33 IST)

தண்டனைக் கைதியாக கிஷோர் நடிக்​கும் புத்தன் இயேசு காந்தி

உலகம் இன்று தொழில்நுட்பத்தில் சுருங்கி உள்ளங்கைக்குள் வந்து விட்டது. ஆனால் மனிதர்கள் தனித்தனி தீவுகளாகக் கிடக்கிறார்கள். சக மனிதர்களிடம் அன்பு காட்டும் குணம் குறைந்து விட்டது. சக மனிதனின் அன்பையும் உரிமையையும் பாராட்டும் ஒரு கதைதான், புத்தன் இயேசு காந்தி படம்.
 
இப்படத்தை இயக்கியுள்ளவர் வே.வெற்றிவேல் சந்திரசேகர். இவர் பத்திரிகை, டிவி, சினிமா என்று பல்வேறு அனுபவங்களைப் பெற்றவர். சில குறும்படங்களையும் இயக்கியவர்​.​ இப்படத்தை பிளஸ்ஸிங் எண்டர்டெய்னர்ஸ் சார்பில் பிரபாதிஷ் சாமுவேல் தயாரிக்கிறார். இணை தயாரிப்பு கபிலன் சிவபாதம். முக்கிய கதை மாந்தர்களாக அசோக், கிஷோர், வசுந்தரா நடிக்கிறார்கள். கூடவே மதுமிதா, 'கல்லூரி' அகில்.  
 
அசோக், வசுந்தரா இருவரும் பத்திரிகையாளர்கள். அசோக் ஜாலி பேர் வழி. சமூகத்தை வெகுஜனரசனை, கேளிக்கை என்று இலகுவான வழியில் அணுகுபவர். வசுந்தராவோ சமூகக் கோபமும், பொறுப்பும், போராடும் குணமும் கொண்டவர். அநீதிகண்டு பொங்குபவர்.​ கருத்து கொள்கை முரண்பாடுள்ள இருவருக்குள்ளும் ஈர்ப்பு வருகிறது.  இந்த இருவரும் ஒரு பேட்டிக்காக ஒரு நபரைச் சந்திக்கிறார்கள். அவர் ஒரு சிறைத்தண்டனைக் கைதி.
 
அவருடன் மூன்று நாட்கள் பேசுகிறார்கள். அவரை மாற்ற முயல்கிறார்கள். ஆனால் அவரோ இவர்களை மாற்ற முயல்கிறார். அந்தளவுக்கு சித்தாந்தவாதி. இப்படி செய்தி சேகரிக்கச் சென்றவளே செய்தி ஆகிறாள். அது சமூகத்தில் என்னமாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதுதான் கதையின் போக்கு.
 
இது முழுக்க சென்னையில் நடக்கும் கதை. படத்துக்காக  பத்திரிகை அலுவலகம், ஜெயில் என 2 செட்கள் போடப்பட்டுள்ளன. சிறையில் இருக்கும் தண்டனைக் கைதியாக கிஷோர் நடிக்கிறார். அவர் இந்த பாத்திரத்துக்கு நிறைய குறிப்புகள் ஆவணங்களைப் பார்த்து தன்னை தயார்படுத்திக்கொண்டு நடித்து வருகிறாராம்.
 
படத்துக்காக சென்னையில் போராட்டங்கள் நடைபெறும் வள்ளுவர் கோட்டம், சேப்பாக்கம் போன்ற இடங்களில் பல மாதங்கள் படப்பதிவு செய்து சேர்த்துள்ளனர். இது மூன்றே நாட்களில் நடக்கும் கதை. படத்தின் பெரும்பகுதி இரவில் நிகழ்கிறது​.​ சென்னையின் இரவு நேர இன்னொரு முகத்தை வியப்பூட்டும்படி பதிவு செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் விஜய் ஆம்ஸ்ட்ராங்.
 
சென்னையில் புத்தன் இயேசு காந்தி வேகமாக வளர்ந்து வருகிறது.