1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 21 நவம்பர் 2021 (14:09 IST)

சூர்யாவுக்கு இதில் சம்மந்தமில்லை.. நான்தான் முழு பொறுப்பு! – இயக்குனர் ஞானவேல் விளக்கம்!

ஜெய்பீம் பட சர்ச்சை விவகாரத்தில் சூர்யாவை பொறுப்பேற்க சொல்வதில் நியாயமில்லை என அந்த படத்தின் இயக்குனர் ஞானவேல் தெரிவித்துள்ளார்.

நடிகர் சூர்யா நடித்து த.செ.ஞானவேல் இயக்கத்தில் வெளியான படம் ஜெய்பீம். இருளர் பழங்குடி மக்களின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படம் பலரது பாராட்டுகளை பெற்றது.

அதேசமயம் இந்த படத்தின் வன்னியர் சமுதாயத்தை தவறாக சித்தரித்துள்ளதாக பாமக எம்.பி அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சமூக வலைதளங்களில் தொடர்ந்து இந்த படத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் பேசி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது இதுகுறித்து பேசியுள்ள ஜெய்பீம் படத்தின் இயக்குனர் ஞானவேல் “ஜெய்பீம் படத்தில் இடம்பெற்ற காட்சிகளுக்கு நடிகர் சூர்யாவை பொறுப்பேற்க சொல்வது நியாயமற்றது. இதற்கு இயக்குனராக நான் மட்டுமே முழு பொறுப்பு. யாரையும் புண்படுத்தும் நோக்கில் உள்நோக்கத்துடன் அந்த காட்சிகளை அமைக்கப்படவில்லை. சர்ச்சைக்குரிய அந்த சில வினாடி காட்சி முன்பே எங்கள் கவனத்திற்கு வந்திருந்தால் அதை நீக்கியிருப்போம். இதனால் மன வருத்தம் அடைந்தவர்களுக்கும், புண்பட்டவர்களுக்கும் என் வருத்ததை தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்