அவர் படங்களுக்கு இசையமைத்தால் இனம்புரியாத சந்தோஷம்… இளையராஜா நெகிழ்ச்சி!
தமிழ் சினிமாவில் அறிமுகம் தேவையில்லாதவர்களில் ஒருவர் இசையமைப்பாளர் இளையராஜா. லட்சக்கணக்கான ரசிகர்கள் அவரையும், அவரது பாடல்களையும் தங்கள் மூச்சுக்காற்றாகவே நினைத்து வருகின்றனர். தன்னுடைய 82 ஆவது வயதிலும் படங்களுக்கு இசையமைத்துக் கொண்டும் உலகம் முழுவதும் சுற்றி வந்து இசைக் கச்சேரிகள் செய்வது என்றும் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார்.
சில மாதங்களுக்கு முன்னர் தான் சிம்பொனி ஒன்றை உருவாக்கி வருவதாக இளையராஜா வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். valiant எனப் பெயரிடப்பட்டுள்ள அவரின் முதல் சிம்பொனியை சமீபத்தில் பதிவு செய்துள்ளார். இது இசைக் கலைஞர்களோடு அவர் ஒத்திகைகள் பார்த்த வீடியோ இணையத்தில் வெளியாகி கவனம் பெற்றது. விரைவில் இந்த சிம்பொனி இசை கச்சேரி லண்டனில் உள்ள ஒரு இசையரங்கில் நடக்கவுள்ளது.
இளையராஜாவின் அற்புதமான இசைகளை வெளிக்கொண்டு வந்த இயக்குனர்களில் ஒருவர் மறைந்த இயக்குனர் பாலு மகேந்திரா. இந்நிலையில் இளையராஜா தன்னுடைய நீண்டகால நண்பரும் இயக்குனருமான பாலுமகேந்திரா பற்றிய பாலு மகேந்திராவைக் கொண்டாடுவோம் என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். அப்போது “எனக்கு பிடித்த இயக்குனர் பாலு மகேந்திரா. அவர் ஒரு படம் இயக்கிவிட்டு, அடுத்த படம் இயக்குவதற்குள் நான் 100 படங்களுக்கு இசையமைத்து இருப்பேன். ஆனால் அந்த படங்களில் கிடைக்காத இனம்புரியாத சந்தோஷம், அவர் படத்துக்கு இசையமைக்கும் போது எனக்குக் கிடைக்கும்.” எனப் பேசியுள்ளார்.