திங்கள், 24 மார்ச் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 24 மார்ச் 2025 (07:42 IST)

இட்லி கடை படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது ஏன்?.. தயாரிப்பாளர் விளக்கம்!

பவர் பாண்டி மற்றும் ராயன் ஆகிய படங்களை இயக்கிய தனுஷ் அடுத்து இட்லி கடை என்ற படத்தை இயக்கி நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் தேனி உள்ளிட்ட தனுஷின் சொந்த ஊர்ப் பகுதிகளில் தொடங்கி நடந்தது.  படத்தை டான் பிக்சர் தயாரிக்க, ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளராக கிரண் கௌஷிக் பணியாற்றுகிறார்.

இந்த படத்தில் ராஜ்கிரண், சத்யராஜ், நித்யா மேனன் மற்றும் அருண் விஜய் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். படத்தின் பெரும்பாலானக் காட்சிகள் தேனி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் படமாக்கப்பட்டது. இன்னும் கடைசி கட்டப் படப்பிடிப்பு டெல்லி மற்றும் பாங்காங் ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட வேண்டியுள்ளது. இதற்கிடையில் தனுஷ் தான் நடிக்கும் இந்தி பட ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார்.

இந்நிலையில் இந்த படம் அறிவிக்கப்பட்ட படி ஏப்ரல் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆகாது என தகவல்கள் பரவிய நிலையில் அதை உறுதிப் படுத்தியுள்ளார் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன். இது பற்றி கூறியுள்ள அவர் “படத்தில் இன்னும் 10 சதவீதக் காட்சிகள் படமாக்கப்பட வேண்டியுள்ளது. சத்யராஜ், அருண் விஜய், நித்யா மேனன் மற்றும் ராஜ்கிரண் ஆகியோர் சேர்ந்து நடிக்கவேண்டிய காட்சிகள் உள்ளன. அதனால் அவர்கள் தேதிகளை ஒருங்கிணைப்பது சவாலாக உள்ளது. அதனால் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளிவைத்தோம். புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும்” எனக் கூறியுள்ளார்.